12/02/2026
மீண்டும் தலைதூக்கும் சிங்கள - பௌத்த தீவிரவாதம்:
இலங்கையின் இரண்டாவது அறகலையின் மூலம் வீழ்த்தப்படுவாரா அநுர குமார திசாநாயக்க?
-எம்.எல்.எம்.மன்சூர் Mlm Mansoor
மேற்படி தலைப்பில் எம்.எல்.எம்.மன்சூர் எழுதியிருக்கும் அரசியல் கட்டுரையை நன்றியுடன் பகிர்கிறேன்.
அரசியல் அரங்கில் நிகழும் மாற்றங்கள் குறித்த கூர்மையான அவதானம் இது. அரசாங்கம் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ராஜதந்திர அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். உள்ளீர்க்கும் பயணமும் பாதையும்தான் (Inclusive Path) நிலைபேறானது என்பதை செயலில் காட்ட வேண்டும்.
சிவில் சமூகப் பரப்பில், முற்போக்கு சக்திகள் இன்னும் வீரியமாகவும் செயலூக்கத்தோடும் இயங்க வேண்டும் என்பதை இக்கட்டுரை குறிப்பால் உணர்த்துகிறது.
✨✨✨
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம், யாழ் திஸ்ஸ விஹாரை சர்ச்சை தொடர்பாக ஜனாதிபதி நிகழ்த்திய உரை, கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சர்ச்சை மற்றும் மிகிந்தலை தேரரை இழிவு படுத்தும் விதத்தில் அமைச்சர் லால்காந்த நிகழ்த்தியதாக கூறப்படும் உரை என்பன 2022 இன் பின்னர் கடும் பின்னடைவைச் சந்தித்து, முற்றிலும் முடங்கிப் போயிருந்த சிங்கள - பௌத்த தீவிரவாத சக்திகளுக்கு புதுத் தெம்பையும், உற்சாகத்தையும் ஊட்டியுள்ளன. இந்தச் சக்திகள் இது வரையில் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அந்தப் பொன்னான தருணம் இதோ வந்திருக்கிறது.
இதனையடுத்து 'என்பிபி/ ஜேவிபி அரசாங்கம் பௌத்த மதத்தையும், சிங்கள - பௌத்த பண்பாட்டையும் அழித்தொழிக்க முயலும் தீய சக்தி' என்ற சுலோகத்தை பரவலாக சமூகமயப்படுத்துவதற்கான ஒரு முயற்சி பல முனைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வலுவான மறைகரம் இச்செயல் திட்டத்தின் பின்னணியிலிருந்து, மிகவும் தந்திரமான விதத்தில் காய்களை நகர்த்தி வருவதனையும் ஊகிக்க முடிகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடு இதுவரையில் கண்ட தலைசிறந்த அரச தலைவர் என்றும், அவருடைய தலைமையின் கீழ் இலங்கை தேசிய ஐக்கியத்துடன் கூடிய வளமார்ந்த ஒரு எதிர்காலத்துக்குள் பிரவேசிக்கப் போகிறது என்றும் அவரது ஆதரவாளர்கள் புகழாரம் சூட்டி வரும் அதே வேளையில், மற்றொரு பிரிவினர் அவரை 'பௌத்த மதத்தையும், சிங்கள இனத்தையும் அழித்தொழிப்பதற்கு அவதாரம் எடுத்திருக்கும் மாபெரும் அரக்கன்' என்றும், 'சிங்கள பிரபாகரன்' என்றும், தேசத் துரோகி என்றும், தமிழ் டயஸ்போராவுக்கு எதிரில் மண்டியிடும் கோழை என்றும் திட்டித் தீர்க்கிறார்கள்.
சம விகிதத்தில் இருந்து வரும் இந்த இரு பிரிவினருக்குமிடையில் கடுமையான சொற்போர்கள் நிகழும் களங்களாக மாறியிருக்கின்றன சிங்கள சமூக ஊடகங்கள்.
உதாரணமாக, 'சுதந்திர தின நிகழ்வின் போது மல்டி பெரல் ரொக்கட் லோஞ்சர்கள் போன்ற பாரிய ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை' எனக் கூறி, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வரும் இனவாதிகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் எழுதப்பட்ட ஒரு முகநூல் பதிவு இது :
"சுதந்திர தின வைபவத்தின் போது மல்டி பெரல் ரொக்கட் லோஞ்சர்களை காட்சிப்படுத்துவது யாருக்கு? ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் தமக்கு யுத்த அச்சுறுத்தலை எடுத்து வரும் நாடுகளுக்கு தமது இராணுவ பலத்தைக் காட்டுவதற்கு அவ்வாறு செய்வதாக கருதலாம். ஆனால், இலங்கை உள்ளே இருப்பவர்களை இலக்கு வைத்துத் தான் அப்படிச் செய்ய முடியும். அதாவது, வடக்கு கிழக்கு தமிழர்களை பயமுறுத்துவதற்கும், தெற்கில் வாழும் சிறு எண்ணிக்கையிலான குருட்டு பக்தர்களை உசுப்பேற்றுவதற்கு மட்டும் தான் அவ்வாறான ஒரு காட்சிப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும்".
- ரங்கன பிரசாத் ஆரியதாசவின் முகநூல் பதிவு
என்பிபி/ஜேவிபி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒருவரையொருவர் வெறுப்புடனும், வன்மத்துடனும் நோக்கும் ஒரு சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது. அந்த வன்மம் அரசியல் தலைவர்கள் வரையில் வியாபித்திருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. தமக்கு கிடைத்திருக்க வேண்டிய ஜனாதிபதி பதவியை அநுர குமார திசாநாயக்க அநியாயமாக தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறார் என்ற விரக்தியில் குமுறிக் கொண்டிருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்றவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த வன்மத்தையே கக்கிக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் காலஞ்சென்ற நந்தன குணதிலகவும் கடைசி வரையில் அதே மனநிலையிலேயே இருந்து வந்தார்.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் முதல் தடவையாக ஒரு பெரும் சமூக கொந்தளிப்புடன் இணைந்த விதத்தில் அரசியல் நெருக்கடியொன்று தலைதூக்கி வரும் ஒரு பின்புலத்தில் - 2022 அரகலயவின் குழந்தையான என்பிபி/ஜேவிபி அரசாங்கம் 2026 இல் அல்லது 2027 இன் தொடக்கத்தில் வெடிக்கப் போகும் இலங்கையின் இரண்டாவது அரகலயவின் மூலம் வீழ்த்தப்படப் போகிறது எனப் பரவலாக ஹேஷ்யங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் ஒரு பின்புலத்தில் - நாடு அதன் 78 ஆவது சுதந்திர தினத்தை வழமையான பெருமித உணர்வுடன் கடந்த வாரம் கொண்டாடியது.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய தனது சுதந்திர தின உரையில் அனைத்து இனங்களையும், அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து நவ இலங்கையை கட்டியெழுப்புவதற்கு முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்ததுடன்' 'இனவாதம்' மற்றும் 'மத தீவிரவாதம்' என்பன நமது அகராதியிலிருக்கும் மிகவும் அவலட்சணமான சொற்கள் என்ற விடயத்தையும் வலியுறுத்திக் கூறினார்.
அதே சுதந்திர தினத்தன்று களுத்துறையில் மத வழிபாட்டுத் தலமொன்றில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்று, உணர்ச்சிகரமான விதத்தில் உரை நிகழ்த்திய முன்னாள் JHU பாராளுமன்ற உறுப்பினரும், சிங்கள ராவய அமைப்பின் தலைவருமான அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்த ஒரு சில கருத்துக்கள் 'அவலட்சணமானவை':
"தமது சொந்த தாய்நாட்டில் கைவிடப்பட்டு, அநாதைகளாக்கப்பட்டிருக்கும் சிங்கள பௌத்த மக்கள் கொண்டாடுவதற்கு சுதந்திரம் என்று எதுவுமில்லை" எனக் கூறி தனது உரையை ஆரம்பித்தார் அவர்.
அரசாங்கத்துக்கு எதிராக கடும் இனவாதத் தொனியில் நிகழத்தப்பட்ட அந்த உரை நெடுகிலும் இன்று இலங்கையில் சிங்கள - பௌத்த மக்கள் எதிர்கொண்டு வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 'மற்றவர்களே' (அதாவது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரே) காரணமென மறைமுகமாகவும், சில இடங்களில் நேரடியாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று சிங்களவர்களின் குடித்தொகை கணிசமான அளவில் குறைந்திருப்பதற்கு 1970 கள் தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட 'நாம் இருவர் - நமக்கு இருவர்' என்ற குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரமே காரணமெனக் கூறிய அவர், அந்தப் பிரச்சாரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் மாற்று மதத்தவர்கள் எனக் குற்றம் சாட்டினார். புறக்கோட்டையிலிருந்தும் ,செட்டியார் தெருவிலிருந்தும் சிங்கள வியாபாரிகள் முற்றாக அகற்றப்பட்டு, அந்த இடங்களில் இப்பொழுது முறையே முஸ்லிம் மற்றும் தமிழ் வியாபாரிகளின் ஆதிக்கம் நிலவி வருவதாகவும், நாவலையில் டைல்ஸ் வியாபாரத்தை சிங்களவர்களிடமிருந்து தமிழ் வர்த்தகர்கள் அபகரித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்த கருத்துக்கள் ஒரு விதத்தில் அபத்தமானவை. பல தசாப்த காலமாக இலங்கையில் வர்த்தகம் தாராளமயமாக்கப்பட்டு, ஒரு கட்டற்ற சந்தை நிலவி வருகின்றது என்ற பொருளாதார யதார்த்தத்தை மறுக்கும் வரட்டுத்தனமான வாதங்கள்.
இலங்கையில் புதிதாக உருவாகி வரும் இந்தச் சூழலை - அதாவது, 'சிங்கள பௌத்தர்களுக்கும், சிங்கள பண்பாட்டுக்கும் ஆபத்து' என உரத்து ஒலிக்கும் கோஷத்தை - தமது அரசியலுக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே எதிர்க்கட்சிகளின் திட்டம். புத்த பிக்குகளை தூண்டி அவர்களுக்கு ஊடாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, கவிழ்க்க முடியுமென தமது வாக்கு வங்கிகளை இழந்திருக்கும் இக்கட்சிகள் கணக்குப் போடுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பொதுசன முன்னணி (SLPP), ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் யுஎன்பி போன்ற பிரதான அரசியல் கட்சிகள் ' இலங்கையின் தீவிரவாத அரசியல் பிக்குகள்' (Militant Monks) என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினரால் அநுர குமார அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரத்தை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
கல்வி மறுசீரமைப்பில் ஆண்டு ஆறு மொடியூல் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் போது ஜீ எல் பீரிஸ், உதய கம்மன்பில போன்றவர்கள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களை அணுகி, அவர்கள் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடச் செய்வதற்கு முயற்சித்ததாகவும், அம்முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இலங்கை இன்று எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதார நெருக்கடிகளை தீர்த்து வைப்பதற்கு புதிய மாற்றுத் திட்டங்களோ, புத்தாக்க இயல்பிலான யோசனைகளோ எவையுமில்லாமல் வெறும் வங்குரோத்து நிலையிலிருந்து வரும் தரப்புக்கள் இப்படியான மூன்றாம் தரமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர இப்பொழுது அவர்களுக்கு வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.
சரியாக சொல்லப்போனால், பௌத்த மதத்தின் நான்கு பிரிவுகளையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், தலதா மாளிகை மற்றும் நாட்டில் இருக்கும் 18,000 க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் ஆகிய தரப்புக்களை உள்ளடக்கிய இலங்கையின் சிங்கள-பௌத்த ஸ்தாபனத்துக்கும், அரசாங்கத்துக்குமிடையில் ஒரு மோதல் நிலையை உருவாக்கி, அதன் மூலம் பௌத்த மக்களின் உணர்வுகளைத் தூண்டி, தமது வாக்கு வங்கிகளை அதிகரித்துக் கொள்ள முடியமென்பதே இக்கட்சிகளின் திட்டம்.
ஆனால், அடுத்து வரும் தேர்தல்களில் இலங்கையில் 2019 இல் தோன்றிய விதத்தில் ஒரு பாரிய சிங்கள -பௌத்த அலை உருவானால் அதன் மூலம் நாமல் ராஜபக்ச அணி மட்டுமே முழுமையாக பயனடைய முடியும் என்பது கசப்பான யதார்த்தம்.
நாமலை அடுத்த ஜனாதிபதியாக முடிசூட வைப்பதை நோக்கிய நுட்பமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனை பார்க்க முடிகிறது. பெருமளவு பார்வையாளர்களைக் கொண்ட இராஜ் வீரரத்னவின் யூடியூப் தளம் ஏற்கனவே அந்தப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. அநுர குமார அரசாங்கத்துக்கு எதிராக வன்மையான விதத்தில் தமது கருத்துக்களை தெரிவித்து வரும் இத்தாகந்தே சந்தாதிஸ்ஸ (ராவண பலய), அக்மீமன தயாரத்ன (சிங்கள ராவய), கலகொடஅத்தே ஞானசார (பொதுபல சேனா), முருத்தெட்டுவே ஆனந்த போன்ற முன்னணி பிக்குகள் பலரும் ராஜபக்ச முகாமினால் போஷித்து, வளர்க்கப்பட்ட அதன் செல்லப் பிள்ளைகள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
அதே வேளையில், SJB என்றுமில்லாத ஒரு தடுமாற்ற நிலைக்குள் தள்'ளப்பப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் IMF நிபந்தனைகள் எடுத்து வரும் பொருளாதார பின்விளைவுகள் போன்றவற்றை மட்டும் சுலோகங்களாக பயன்படுத்தி அடுத்த தேர்தலில் என்பிபி அரசாங்கத்தை வீழ்த்த முடியும் என்ற சஜித்தின் நம்பிக்கையில் மண்ணை அள்ளி வீசியிருக்கிறார் நாமல்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக சஜித் பிரேமதாசவும், அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒரு சில எம்பி க்களும் நிகழ்த்திய இனவாதச் சாய்வுடன் கூடிய உரைகளை வேகமாக புத்துயிர்ப்படைந்து வரும் சிங்கள தேசியவாதத்துடன் தம்மையும் பொருத்திக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், அந்தச் சுலோகத்தை ஏற்கனவே நாமல் ராஜபக்ச அணி தனது ஏகபோகமாக சுவீகரித்துக் கொண்டுள்ளது.
அறகலய அதற்கு ஆதரவாக இருந்து வந்த இலட்சக்கணக்கான இலங்கை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்த எதிர்பார்ப்புகளை அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றி வைத்துள்ளதா என்றால் 'இல்லை' என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் இலஞ்சம் என்பவற்றில் சம்பந்தப்பட்டிருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விடயத்தில் அரசாங்கம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு வெற்றியீட்டியிருக்கிறது. அதேபோல "ஊழலோ முறைகேடுகளோ இல்லாத அரச துறை" என்ற சுலோகத்துக்கும் அது செயல்வடிவம் கொடுத்து வருகின்றது என்ற விடயத்தை எவரும் மறுக்க முடியாது.
இந்தப் பின்புலத்தில் மக்களை அணிதிரட்டக் கூடிய சுலோகம், எளிதில் சாதாரண மக்களை உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய சுலோகம் 'பௌத்த மதத்துக்கும், 2500 வருட கால சிங்கள பண்பாட்டுக்கும் ஆபத்து' என்பதும், 'அந்த மதத்தின் புனித காவலர்களான புத்த பிக்குகளை இழிவுபடுத்துவதற்கு இடமளிக்க முடியாது' என்பதுமாகும்.
நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் மூலம் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் ராய் பல்தஸாரோ அல்லது ஹரிணி அமரசூரியவோ அல்ல. அத்தகைய விவேகபூர்வமற்ற நகர்வுகள் இன்றைய அரசியலின் ஒரு முன்னுரிமையாகவும் இருந்து வரவில்லை. 'எதிரி யார்' என்ற தெளிவு இல்லாமல் இப்பொழுது எதிர்ப்பரசியல் செய்பவர்கள் அந்த முட்டாள்தனத்துக்கு அடுத்து வரும் தேர்தல்களில் ஒரு கடும் விலையைச் செலுத்த வேண்டி நேரிடும் என்பதை மட்டும் சொல்லி வைக்க வேண்டும்.
"ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும், ஏனைய முக்கியமான அமைச்சர்களும் அடிக்கடி மகா நாயக்க தேரர்களை சந்தித்து, தமது அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து விளக்கமளித்து வருகிறார்கள். அரசாங்கம் புனித தந்த தாதுக்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்து, அதற்கு முழுமையான அனுசரணையையும் வழங்கியிருந்தது. புத்த மதத்துக்கு முதன்மை அந்தஸ்து என்ற அரசியல் யாப்பின் விசேட ஷரத்து மாற்றமில்லாமல் அவ்வாறே நீடித்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், ஜனாதிபதி பௌத்த மதத்துக்கும், சிங்கள இனத்துக்கும் எதிரானவர் என்று எப்படிக் கூற முடியும்" என்ற கேள்விக்குப் பதிலளித்த சமூக / அரசியல் செயற்பாட்டாளர் விதர்சன கன்னங்கர தெரிவித்த கீழேயுள்ள கருத்து, இலங்கையின் தீவிரவாத பிக்குகள் மற்றும் விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்ற இனவாதிகள் போன்றவர்களின் உளவியல் செயற்படும் விதத்தை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது :
"நீங்கள் அசல் சிங்கள பௌத்தர் என்பதை நிரூபிப்பதற்கு அது மட்டும் போதாது. இன்னொரு முக்கியமான காரியத்தையும் செய்ய வேண்டும். அதாவது, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு விரோத அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும். அதை பகிரங்கமாக சொல்லவும் வேண்டும்".
விதர்சன கன்னங்கர சொல்ல வந்த விடயத்தின் சாராம்சம் 'மத வெறியைத் தூண்ட வேண்டுமானால் முதலில் ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டும்' என்பது, சிறுபான்மை சமூகங்களே சிங்கள -பௌத்த தீவிரவாத தரப்புக்களால் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் அந்த எதிரி. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக ஆவேசமாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களை உன்னிப்பாக நோக்கினால் அவர் சிங்கள பெரும்பான்மை மக்களின் நலன்களை உதாசீனம் செய்து, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரை அளவுக்கு அதிகமாக அரவணைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது வீசப்பட்டு வருவதை பார்க்க முடியும். 'சிங்களவர்களின் வாக்குகளால் வென்று, தமிழர்களின் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு முயற்சிப்பவர்', 'ஜனாதிபதி தமிழர்களுடன் சேர்ந்து தைப்பொங்கலை கொண்டாட முடியுமானால் சிங்கள புத்தாண்டை ஏன் கொண்டாட முடியாது?' என்ற விதத்திலான குற்றச்சாட்டுக்களாகவே அவை இருந்து வருகின்றன.
'எல்லாளன் என்ற தென்னிந்திய ஆக்கிரமிப்பாளன் அநுராதபுரத்தில் போரில் கொல்லப்பட்டான். அப்பொழுது அவன் 'நான் சிங்கள - பௌத்தனாக பிறந்து, உங்கள் அனைவரையும் பழிவாங்க வேண்டும்' என்று சூளுரைத்ததாகக் கூறப்படுகிறது. அது இப்பொழுது நிகழ்ந்திருப்பது போல் தெரிகிறது" என்கிறார் விமல் வீரவன்ச.
"இந்த அரசாங்கத்துக்குள் 'சிங்கள பிரபாகரன்கள்' பலர் இருந்து வருகிறார்கள்" என்பது சரத் வீரசேகரவின் கருத்து. '1988 இல் புனித தலதா மாளிகையின் மீது தாக்குதல் தொடுத்தவர்களும் (ஜேவிபி), 1998 இல் தலதா மாளிகையின் மீது தாக்குதல் தொடுத்தவர்களும் (எல்ரீரீஈ) இப்பொழுது ஒன்றாக கைக்கோர்த்து கொண்டுள்ளார்'கள்' என்கிறார் ஒரு அரச எதிர்ப்பு யூடியூபர்.
"சிங்கள - பௌத்தத்தின் மீது பெலவத்த டோபிகள் கொண்டிருக்கும் தீராத வன்மத்துக்கும், இலங்கையின் தனித்துவமான முதன்மை கலாசாரத்தின் மீது அவர்கள் தொடுத்து வரும் தாக்குதல்களுக்கும் தக்க பதிலடி கொடுப்போம்" என்றும், "சிங்கள - பௌத்தர்களின் அசுர பலத்தின் முன்னால் அநுர குமார திசாநாயக்கவை மண்டியிடச் செய்வோம்" என்றும் எழுதப்படும் ஏராளமான சிங்கள முகநூல் பதிவுகளை பார்க்க முடிகிறது.
"இலங்கையில் நிகழப்போகும் பெரும் மாற்றத்துக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு சங்கைக்குரிய ஹாமிதுருமார் முன்வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஒவ்வொரு பன்சலவும் இந்தப் பறையர்களை விரட்டியடிக்கும் போராட்ட நிலையங்களாக மாறும்" என எழுதுகிறார் முதன்மையான சிங்கள சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர்.
இங்குள்ள ஒரு ஆறுதலான விஷயம், புத்த பிக்குகளையும் உள்ளிட்ட விதத்தில் சிங்கள-பௌத்த தீவிரவாத குரல்கள் சமூக ஊடகங்களில் எந்த அளவுக்கு வன்மத்துடன் ஒலித்து வருகின்றனவோ அதே அளவு தீவிரத்துடன் அதற்கான எதிர்ப்புக் குரல்களும் ஒலித்து வருவதாகும். இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் தேரவாத பெளத்த மதத்தின் சீரழிவு, தேக்கநிலை என்பன குறித்தும், இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்தில் செயற்பட்டு வந்திருக்கும் ஞானசார, அத்துரலியே ரதன போன்ற தேரர்களின் எதிர்மறை பங்களிப்புக்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ( தற்பொழுது சிங்கள இளைஞர்கள் மத்தியில் பெருமளவுக்கு பிரபல்மயடைந்திருக்கும்) கெக்கிராவே சுதஸ்ஸன தேரர் "இலங்கையின் பன்சலைகள் பொருளாதார மத்திய நிலையங்களாக மாறி நீண்ட நாட்களாகி விட்டன" என அங்கத தொனியில், துணிச்சலாக தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
இலங்கையில் இன நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை என்பவற்றுக்கு பெருமளவுக்கு குந்தகம் விளைவித்து வரும் தீவிரவாத தேரர்கள் குறித்து கல்கந்தே தம்மானந்த தேரர் போன்ற கல்விமான்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
"1983 ஜூலை இன அழிப்பின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்களை நிகழ்த்திய நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கையுடன் எந்தவொரு இயக்கமும் உருவாகவில்லை என்பது பெரும் துரதிர்ஷ்டம் என்கிறார் அவர்.
தற்போதைய அரச எதிர்ப்பு அலையில் முன்னணியில் இருந்து வரும் ஒரு சில பிக்குகளின் இருண்ட பக்கங்களை பலர் துணிச்சலுடன் அம்பலப்படுத்தி வருகிறார்கள். அசல் பௌத்த தர்மத்தின் பிரகாரம் பிக்கு ஒருவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்க சீலங்களை அப்பட்டமாக மீறியிருக்கும் 'துஷ்ஷீல பிக்ஷுக்கள்' என அவர்களை வர்ணித்து வருகிறார்கள். அவ்வாறன நூற்றுக்கணக்கான முகநூல் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட ஓர் உதாரணங்கள் கீழே:
"தற்போதைய அரசாங்கம் புத்த மதத்துக்கும், புத்த சாசனத்துக்கும் இழைத்து வரும் கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் எமது ஹாமிதுருமார் ஒரு பாத யாத்திரையை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்".
"நாட்டு மக்கள் என்ற முறையில் அது குறித்து எங்களுக்கும் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது-
புத்த தர்மத்தையும், புத்த சாசனத்தையும் அவமதிக்கும் விதத்தில், கேலிக்குள்ளாக்கும் விதத்தில் நடந்து கொள்ளும் சில ஆட்கள் காவி உடை தரித்து பிக்குகள் என்ற தோற்றத்தில் இருந்து வருகிறார்கள்......... பன்சலைக்குள் ஒழுக்கக்கேடான காரியங்களைச் செய்யும் இந்நபர்கள் அரசியல்வாதிகளின் கைப்பாவைகள் என்பது யாவரும் அறிந்த இரகசியம்.......... நாட்டுக்கும், ஊருக்கும், புத்த சாசனத்துக்கும் எந்தப் பிரயோசனமுமில்லாத தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கும் இப்படியான ஆட்களுக்கு எதிராகவும் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அல்லது சட்ட ரீதியான தண்டனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதற்கும் இதே பாத யாத்திரையை பயன்படுத்திக் கொண்டால் நல்லது......."
-இமாலி மதநாயக்கவின் முகநூல் பதிவு
தீவிர வலதுசாரி சக்திகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் இலங்கையின் இரண்டாவது அறகலய வெகு விரைவில் அல்லது 2027 இன் தொடக்கத்தில் (ஓர் இயல்பான மக்கள் எழுச்சியாக) நிகழ்வதற்கான சாத்தியப்பாடு மிக மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால், ஏற்கனவே பல இடங்களில் இரகசியமாக திட்டங்கள் தீட்டப்பட்டு வரும் நிலையில், அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழல்/ முறைகேடு எதிர்ப்பு நடவடிக்கைகளினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பண முதலைகளின் நிதிப்படுத்தலுடன் செயற்கையான விதத்தில் அந்த அறகலய தூண்டப்பட்டால் (2022 இல் நிகழ்ந்ததைப் போல் அல்லாமல்) வரலாற்றின் ஒரு பாரிய இரத்தக் களரிக்கு அது வழிகோல முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இறுதியாக, அநுர குமார திசாநாயக்கவை அகற்றி விட்டு 2029 ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னரோ ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதற்கு (Replacement) காத்திருக்கும் நாமல் ராஜபக்சவை பிரதிநிதித்துவம் செய்யும் முகாம் குறித்த ஒரு குறிப்பு இது:
இலங்கையில் மீண்டும் 'ராஜபக்ச சித்தாந்தம்' புத்துயிர்ப்படைந்து வருவதன் ஆபத்து குறித்து Colombo Telegraph இணைய இதழில் அஷான் வீரசிங்க எழுதியிருக்கும் கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்:
"மஹிந்த சித்தாந்தம்" என்பது மஹிந்த ராஜபக்ச என்ற தனி மனிதர் சிந்திக்கும், செயல்படும் விதம் மட்டுமல்ல. அது நமது சமூகத்தின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு பிரிவினர் தம்மைச் சூழ உள்ள உலகை நோக்கும் கண்ணாடியாகவும் உருவாகியிருக்கிறது".
"நாகரிகத்தின், பண்பாட்டின் அடிப்படை அளவுகோல்களை கூட மீறும் இந்த முதிர்ச்சியடையாத சிந்தனைப் போக்கை கண்மூடித்தனமாக அரவணைத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தினர் இன்னும் எம்மத்தியில் இருந்து வருகிறார்கள் என்ற விடயத்தை அவர்கள் முன்வைத்து வரும் தீவிரவாதக் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன."
"போலி நம்பிக்கை, மத துஷ்பிரயோகம், மாயை, போலி தேசாபிமானம் மற்றும் இனவாதம் போன்ற நாகரிகத்துக்கு முரணான ஏராளமான பண்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தச் சித்தாந்தம் நமது சமூகத்திலிருந்து களையப்பட அல்லது முறியடிக்கப்படுதல் வேண்டும். மீண்டும் ஒருமுறை மஹிந்த ராஜபக்சைவை தோற்கடிக்க வேண்டிய அரசியல் தேவைக்காக மட்டுமல்லாமல் எதிர்கால தலைமுறைகள் குறித்து சிந்தித்து அவ்வாறு செய்ய வேண்டிய சமூக - கலாச்சாரப் பொறுப்பொன்றும் எமக்கு இருந்து வருகிறது".