24/03/2026
நேரம் பிந்திய இரவு உணவினால் ஏற்படும் அபாயங்கள்..........
கால மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறி கொண்டு போனாலும் நம் உடல் அதன் கடிகாரத்துக்கு உட்பட்டே இயங்கி கொண்டிருக்கும். அதனை நாம் மாற்ற முற்படுவதால் தான் மனிதனுக்கு இன்று 10,000க்கு மேற்பட்ட வியாதிகள் வந்து சேர்ந்து இருக்கின்றன. இவ்வியாதிகளின் தோன்றலுக்கு உணவில் நாம் செய்யும் தவறுகளும் ஒரு காரணம். அதில் முக்கியமானது நேரம் பிந்திய இரவு உணவு.
பொதுவாக பகல் பொழுதுகளில் உணவை செரிக்க வைக்க மெட்டபாலிசம் அதிகமாக சுரக்கும். ஏனெனில் உடல் உழைப்பு பகல் பொழுதுகளில் தான் அதிகமாக இருக்கும். ஆனால் இரவு வேளைகளில் அதன் செயல்பாடு மிக தாமதமாகவே இருக்கும். இவ்வாறான நிலையில் நாம் தாமதமாக உண்ணும் மாவு மற்றும் கொழுப்பு உணவுகள் செரிக்கப்படாமல் கொழுப்பாகவே உடலில் தேங்கி விடும். இதுவே உடல் பருமனுக்கு முதன்மை காரணமாகிறது.
அடுத்ததாக நாம் உண்ணும் மாவு மற்றும் கொழுப்பு உணவுகள் குளுகோஸாக மாற்றப்பட்டு இரத்தத்தில் சேரும். இந்த குளுகோஸை சக்தியாக மாற்றுவது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் எனும் ஹோர்மோன் ஆகும். பகல் பொழுதுகளில் இன்சுலின் சுரக்கும் அளவு சிறப்பாக இருக்கும் அதே வேளை இரவு பொழுதுகளில் மிக தாமதமாகவே இருக்கும்.
இரவில் தாமதமாக உண்ணும் மாவு மற்றும் கொழுப்பு உணவுகள், குறைவான இன்சுலின் சுரப்பால் சக்தியாக மாற்றப்படாது போய் விடும்.
இந்நிலையில் கல்லீரலானது அதனை கொழுப்பாக மாற்றி உள்வாங்கி கொள்கிறது. இதுவே கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) என்றாகிறது. மிகுதி கொழுப்பு மற்ற உறுப்புக்களை சுற்றியும் தோலின் அடிப்பாகத்திலும் கொழுப்பாக படிகிறது. இதனால் கல்லீரல் பாதிப்புக்களோடு சர்க்கரை நோயின் தாக்கமும் அதிகரிக்கிறது.
அத்தோடு தாமதமாக உண்ணப்படும் உணவுகள் சரி வர ஜீரணிக்கபடாமையால் வயிற்றில் அமிலத்தன்மை தோன்றும். அதனோடு நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். இது பல நோய்களுக்கு அழைப்பு விடுக்கும்.
ஜீரண மண்டலம் சீரற்று போனால் நோய்கள் மட்டுமல்ல சீரற்ற மனநிலை, எரிச்சல், மன அழுத்தம் போன்றனவும் தோன்றும். அதாவது சந்தோசமான மனநிலை இல்லாது போகும்.
ஆகவே மெட்டபாலிசம் செயல்பாடு இருக்கும் நேரத்திலேயே நாம் நம் இரவு உணவை முடித்து விடல் வேண்டும். அதாவது இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்து விடல் வேண்டும்.
நேரம் பிந்தி விட்டால் மாவு மற்றும் கொழுப்பு உணவுகளை அறவே தவிர்த்து எளிதில் ஜீரணிக்கக் கூடிய பழங்கள், வேக வைத்த காய்கறிகளை உண்ணலாம். பசி இல்லை என்றால் இரவில் உணவை உண்ணாது விடுதலே சிறந்தது.
பொதுவாக இரவில் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவை அளவோடு உண்ணுதலே சிறந்தது. நார்ச்சத்துக்கள் கூடிய உணவுகளை உண்ணுதல் சிறப்பு.
இரவு வேளைகளில் நேரம் பிந்தாமல் உறங்கச் செல்லும் பழக்கம் இருந்தால் உணவுக்கான தேடலை தவிர்க்கலாம். கண் விழித்திருக்கும் பொழுதுகளில் தான் உணவுக்கான தேடல் அதிகமாக இருக்கும். நோய்க்கான கதவுகளும் திறக்கும்.
ஆரோக்கியமே சிறந்த செல்வம். இயற்கை விதிகளுக்குள் எம்மை சரியாக பொருத்திக் கொள்வதே நலமான வாழ்விற்கு அடித்தளம்.
வாழ்க வளமுடன்!!!