Dr. MNF. Mufliha

Dr. MNF. Mufliha Dr. MNF. Mufliha

நாடு முழுவதும் மிக மோசமான சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளது.பாரதூரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள்உங்களது நோய் கடும் த...
27/11/2025

நாடு முழுவதும்
மிக மோசமான சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளது.

பாரதூரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள்
உங்களது நோய் கடும் தீவிரம் ஆகும் வரை வீட்டில் இருக்காமல் இரவாக முன்னரே அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லுங்கள்.

குறிப்பாக பிரசவக் காலத்தை நெருங்கும் கற்பவதிகள் உங்களுக்கு சாதாரண மகப்பேறு என தீர்மானிக்கப்பட்டிருப்பின் உங்களுக்கு பிரசவ வலி ஆரம்பிக்கும்போதே வைத்தியசாலைக்கு செல்லுங்கள்.... ஏதோ காரணங்களுக்காக உங்களுக்கு சிசேரியன் டெலிவரி என தீர்மானிக்கப்பட்டிருப்பின் காலையிலேயே வைத்தியசாலைகளுக்கு சென்று விடுங்கள்...

தற்போது நாடு முழுக்க உள்ள இரத்த வங்கிகளில் பாரிய இரத்த தட்டுப்பாடும் நிலவுகிறது.

இறுதி நேரத்தில் பிரச்சினைகள் அதிகரித்து வைத்தியசாலைகளுக்கு செல்லும் போது அனாவசியமாக மேலதிக அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம் என்பதனால் பொறுப்புடன் செயற்படுவது அனைவரதும் கடமையாகும்.

நன்றி
டொக்டர்: MNF.Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

ஒருவர் தனது மனைவியை அழைத்து வந்தார். இருங்க... என்ன பிரச்சினை... என்றதும்‌ மனைவி உடனே... ஒன்டுமில்ல மன இவறு சும்மா கூட்ட...
21/11/2025

ஒருவர் தனது மனைவியை அழைத்து வந்தார்.
இருங்க... என்ன பிரச்சினை... என்றதும்‌ மனைவி உடனே... ஒன்டுமில்ல மன இவறு சும்மா கூட்டி வந்துட்டாரு.... என கூறும் போதே குறுக்கிட்ட கனவர்... வாய மூடிட்டு கொஞ்சம் இருங்க நான் சொல்றேன் என்றார்....

இருவருக்குள்ளும் கருத்து முறன்பாடு இருப்பது புரியவே...
சரி முதல்ல அவரு சொல்லட்டும்மா...
பிறகு உங்கள்ட கேட்கன் என்றதும்
ஐயாவுக்கு சந்தோசம்...ஆனால் அம்மாவுக்கு கோபம்....அப்படியே சுவர் பக்கம் திரும்பிக்கொண்டு இருந்தா...

நான் சொல்றேன் மன என ஆரம்பித்தார் கனவர்...
இவ கொஞ்ச நாளா விசர் பிடிச்சு திரியுறா மன என அவர் ஆரம்பிக்கவே...
சுவரை பார்த்தவாறே உங்களுக்குத்தான் விசறு என மனைவி கூற... இனி கனவருக்கு கோபம் வற... நிலமை சரி வராது‌ என்பதை உணர்ந்த நான் ...
என்ன பிரச்சினை என அவர் சொன்ன பிறகு நான் உங்கள உள்ளே கூப்பிட்டு எடுக்கன் என மனைவியை வெளியே அனுப்ப... மீண்டும் அவர் என்னை முறைத்தவாரே கோபத்துடன் வெளியே போய் இருந்தார்.

சரி ஐயா... இப்ப நீங்க சொல்லுங்க..
அவக்கு கொஞ்சநாளா விசறு மன...

சரி... என்ன செய்ரா...
அத ஏன் மன கேட்கிங்க... ஒழுங்கா தூங்குரல... சாமத்துல எழும்பிட்டு கதவ திறந்து போட்டு‌ உலாவி தரியிர..
கள்ளன் வந்தா என்ன மன செய்ர...

சரி வேற என்ன பிரச்சினை... நாம கூதல் என்டு Fanஅ‌ குறச்சி வச்சா அத‌ வேணும் என்டு சாமத்தில கூட்டி உடுறால் மன...எனக்கு‌குளிருது.... கேட்டா அவளுக்கு வேருக்குதாம் என்டு சொல்றாள்.

எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுறாள்....
பீங்கான் கோப்பை எல்லாம் தூக்கி‌சத்தமா அடிச்சு தான் வேலை செய்றாள்.....

முக்கியமான எதையும் கொடுத்திட்டு திரும்ப கேட்டோன என்கிட்ட தரள என்டு சொல்றாள்.. இல்லாட்டி வெச்ச இடம் தெரியாம அங்கயும் இஞ்சயும் பிரட்டி திரிராள் மன... என‌ அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே‌.... இது பெண்கள் நிரந்தரமான மாதவிடாய் நிறுத்தத்தினை எதிர்கொள்ளும் போது ஏற்படும்‌ ஓமோன்களின் அளவு மாற்றத்தினால் ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வை புரிந்து கொள்ளாமையினால் ஏற்பட்ட‌ மனமுறுகல் என்பது புரிந்தது.

ஐயா தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.... கொண்டு போய் மெண்டல் டொக்டர்ட காட்ட போன மன‌.... கத்தி குளரி ஏலா என்டு வந்துட்டாள்....

இப்ப கஷ்ட்டப்பட்டுத்தான் மகளையும் கூட்டிட்டு இவவ கூட்டி வந்த...
மகளும் வெளியான் இரிக்காள். மகலோட இரிக்காலோ வீட்ட ஓடிட்டாளோ தெரியா.. என‌ மகளை அழைத்து என்ன‌ ஓடிட்டாளா இரிக்காளா என கணவர் கோபத்துடன் கேட்கவே....
அதற்கு கோபப்பட்ட மனைவி நான் என்னத்துக்கு ஓட... நீங்கதான் ஓடுங்க‌ என்ற குரலுடன் உள்ளே வந்தார்.

ஐயா தனது மனைவியை பார்த்து முறைக்கவே... சரி ஐயா அவ வருத்தக்காரி என்டு உங்களுக்கு தெரியும்தானே அவட கதைக்கு கோபப்படாம நீங்க கொஞ்சம் வெளிய‌ இருங்க அவவோட பேசனும் என்றதும்
நல்ல ஊசியா பாத்து போட்டுடு மன என கூறிக்கொண்டே ஐயா வெளியே போக....
ஊசிய அவருக்கு போடுங்க என கூறினார் மனைவி....
அப்படி என்னை பார்த்து.....
அவறுதான் எனக்கி பைத்தியம் என்டு சொல்றாரு‌ என்டு பாத்தா நீங்களும் அவரோட‌சேந்திட்டு எனக்கு வருத்தம் என்டு சொல்றிங்க என... என கோபத்துடன் கேட்க...

(நானோ ... ஐயாவ சமாதானமா வெளிய அனுப்ப வேற வழி தெரியலே என மனசுக்குள் நினைத்தவாறே)
கோபப்படாதிங்கம்மா
அப்பதானே அவரு வெளிய போவாரு என அம்மாவை சமாதானம் செய்துவிட்டு இருக்க வைத்து அவருடன் பேச...

இனி என்ன பிரச்சினை என்டு கேட்டா... அதான் அவரு சொல்லிதான இருப்பாரு என்டா...
இனி கோபத்துல இருந்த அம்மாக்கு பேச விருப்பமில்ல...

அவரு சொன்னத எல்லாம் நான் நம்பல...
உங்களுக்கு மாதவிடாய் நிக்கிர நேரம் பெண்களுக்கு வார சாதாரண நிலைதான்... வருத்தம் எல்லாம் ஒன்டும் இல்ல....
அது எங்க ஆம்புளயளுக்கு விளங்குற‌ என சொல்ல...
அப்புடி சொல்லு மன இன்னொரு தரம் என கூறிக்கொண்டே ஒரு வழியாக பேச ஆரம்பித்தார் தாயார்.

நீங்க சொல்லுங்க உங்கட பிரச்சினைக்கு தானே உங்களுக்கு மருந்து தரனும் என சமாதானம் செஞ்சி ஒருவழியா பேச வச்சா...

எனக்கி வேருத்தா Fanஅ போடுற.
அதுக்கு அவருக்கு கூதல் என்டு ஏசுறாரு..

நித்திர வராட்டி நான் சும்மா வாசல்ல உலாவினா என்ன பேயா பிடிக்கய்‌ என்டு ஏசுறாரு...

என்னதயாசும் எங்கயும் வச்சிட்டு எனக்கிட்ட தந்த என்டு சொல்லி எனக்கி ஏசுறாரு...

போதாததுக்கு அண்டக்கி பைத்தியம் என்டு மருந்தெடுக்க கொண்டு போய்ட்டாரு.. நான் ஓடியந்துட்டன்...
அவருக்கு தான் என்னமோ பிரச்சின போல என்றார்...

தேவையான மேலதிக தகவல்களை கேட்டு பரிசோதித்த பிறகு அவருக்கு மாதவிடாய் நிறுத்தத்தினை தொடர்ந்து ஏற்படும் ஓமோன்களின் மாற்றத்தினால் ஏற்பட்ட நிலையே என்பது உறுதியானது.

பின்னர் ஒருவழியாக சிரமப்பட்டு அதனை இருவருக்கும் விளங்கச் செய்து சமாதானம் செய்து சிக்கிச்சையையும் விளங்கப்படுத்தி அதனை ஏற்றுக்கொள்ள பெரும்பாடு‌ பட்டேன்.

#மாதவிடாய் #நிறுத்தம்
மாதவிடாய் நிறுத்தத்தினை அன்மிக்கும் போதும் நிறுத்தம்‌ ஏற்பட்ட‌ பின்னரும்‌ ஏற்படும் மாற்றங்கள்...

பொதுவாக இந்த மாற்றங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஓமோன் குறைவடையும் போது ஏற்பட‌ ஆரம்பிக்கும். இதனால் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள்

ஆரம்பத்தில் குறுகிய‌ இடைவெளியில் மாதவிடாய் ஏற்பட்டு‌ பின்னர் 2 அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படும்.
அதன் பின்னர் மாதவிடாய் நின்றுவிடும்.

ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது
1. உடல் வெப்பநிலை அதிகரிக்கும்:‌
ஈஸ்ட்ரோஜன் பெண்களின்‌உடல் வெப்பநிலையை குறைந்த அளவில் வைத்திருக்கும்.
ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவடையும் போது உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இந்த வெப்பநிலை அதிகரிப்பு பொதுவாக இரவு வேலையில் இருக்கும்.‌
எனவே உடல் சிவந்து வியர்வையுடன்‌ தூக்கமின்றி நடமாடுவர்.

2.ஞாபக மறதி
3.அதிக கோபம்
4.அந்தரங்க‌ உறுப்புகளின் சுருக்கம், தேய்வு: இதனால் சிறுநீர் எரிவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் சொரிச்சல்/கடி, கற்பப்பை இறக்கம் (குடலிறக்கம் என மக்கள் தவறாக அழைப்பர்), சிறுநீர்ப்பை கீழிறங்குவதால் சிறுநீர் கசிவு மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாமல் உடனடியாக ஓடிச்சென்று சிறுநீர் கழிக்க செல்லும் போதே கசிவு ஏற்படுதல்.

5. தாம்பத்திய உறவில் விருப்பமின்மை, அசாதாரண வலி.
6.‌ எலும்புகள் தேய்வு மற்றும் அடைவு
7. கொலஸ்ட்ரோல் நோய்
8. இதய நோய்கள்
9. தூக்கமின்மை
10. மன அழுத்தம்
11. தனித்திருத்தல்
12. உடல் வடிவத்தில் மாற்றம்
13.‌ உடல் பருமன்‌அதிகரித்தல்
14. எதிலும் விருப்பம் இல்லாத தன்மை
15. முடி கொட்டுதல்
16. தோல் வரட்சி
17.‌ மூட்டுக்கள் தேய்வு மற்றும் வலி
18.உடல் வாசனையில் மாற்றம்
19. நெஞ்சு படபடப்பு
20. மார்பக வலி அல்லது அசௌகரியம், தேய்வு மற்றும் தொய்வு
21. கைகால்களில் விரைப்பு மற்றும் ஊசியால் குத்துவது அல்லது கரன்ட் அடிப்பது போன்ற‌ உணர்வு
22.களைப்பு மற்றும் பலகீனம்
23. உடல் நிறை அதிகரிப்பு
24. உணவு செமிக்காமை
25. தலை சுற்று
26. கவனயீனம்
27. தலைவலி
28. வாய்‌ எரிவு
29. முரசு கரைதல்
30. நகங்கள் உடைதல்
31. தசைகளில் வலி
32. பற்கள் சிதைதல்
33. தோல் சொறிச்சல்
34.தோலில் rash, pigmentations
35. இடுப்பு, முதுகு வலி
36. சிறுநீரக கற்கள்
இன்னும் பல.....

பொதுவாக 45 வயதின் பின்னரான பெண்களின் வாழ்வு ஈஸ்ட்ரோஜன் ஹோமோன் குறைவை நோக்கிச் செல்லும். அதன் பின்னரான‌ அவர்களது வாழ்நாள் இவ்வாறான‌ இயற்கையின் மாற்றத்தினால் அல்லது வேறு காரணங்களால் இளமையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் அதன் பின்னரான ஆயுள் மிகவும் சவாலாக அமையும்.

அவர்களை சுற்றியுள்ள ஏனையோர்‌ இந்த அடிப்படை விடயத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவியாகவும்,‌ ஆறுதலாகவும் நடந்து கொள்ளாத போது‌ பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுவதோடு அந்த பெண்ணின் உடல், உள மற்றும் சமூக ஆரோக்கியம் என்பன மென்மேலும் பாதிப்படையும்.

இத்தகைய நிலைகளில் உடல் சூட்டை குறைக்க
1. அறை வெப்பநிலையை தாழ்வாக பேனுதல்..
உதாரணமாக Fan, A/C,
குளிர் பிரதேசம் மற்றும் குளிர்காலம்

2. வியர்வை குறைந்த பருத்தி ஆடைகள்
3. வேலைகளை பகிர்தல்
4.மன அழுத்தத்தை குறைத்தல்
5. காரமான உணவுகளை தவிர்த்தல்.
6. யோகா, சமய நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
7. சோயா அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தல்: இதில் ஈஸ்ட்ரோஜன் போன்ற பதார்த்தங்கள் உள்ளதனால் ஓரளவு நன்மை தரும்.

உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும்‌‌ மாற்றங்களை கட்டுப்படுத்த பழங்கள், கீரைகள், கல்சியம் கொண்ட உணவுகள், தானியங்களை‌ உண்ணுதல்.

கோப்பி, தேயிலை குடிப்பதை தவிர்த்தல்.

சீரான உடற்பயிற்சி

இவற்றுக்கு மேலதிகமாக உங்களது உடலின் ஒவ்வொரு தொகுதியிலும்‌ ஏற்பட்டுள்ள ஏனைய மாற்றங்களின் தன்மைக்கு ஏற்ப டொக்டர்
உங்களுக்கு ஓமோன்‌ ட்ரீட்மென்ட், ஏனைய‌ ட்ரீட்மன்களை வழங்குவர்.

முழுமையாக இல்லாமல் செய்ய முடியாது. ஆனால் அவற்றின் அளவை கட்டுப்படுத்துவதோடு‌ இயல்பு வாழ்வை கிட்டத்தட்ட சாதாரணமாக வாழ்வதற்கும், எலும்பு உடைவுகளை‌தடுப்பதற்கும், போதியளவு தூக்கத்தை பெறுவதற்கும் உதவியாக ட்ரீட்மன் அமையும்.

நன்றி
டொக்டர்:‌‌ MNF. Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

 #மஸ்டல்ஜியா‌  எனப்படும் மார்பக வலி அல்லது அசௌகரியம்.பெண்களில் பொதுவாக காணப்படும் பிரச்சினைகளுல் இதுவும் ஒன்றாகும்.70 வீ...
21/11/2025

#மஸ்டல்ஜியா‌ எனப்படும் மார்பக வலி அல்லது அசௌகரியம்.
பெண்களில் பொதுவாக காணப்படும் பிரச்சினைகளுல் இதுவும் ஒன்றாகும்.

70 வீதமான‌ பெண்களின் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த மார்பக வலி தோன்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக இந்த வலியானது‌ உங்களது மார்பின் மேல்ப்பகுதியில் தோல்ப்பட்டையை அன்மித்த பகுதியில் உணரப்படுவதோடு உங்களது தோல்ப்பட்டை மற்றும் சோல்டருக்கும் பரவலாம்.
(ஹார்ட் அட்டாக் வலியும் இப்படி வரலாம் என்பதனால் அதனையும்‌ இல்லை என‌ உறுதி செய்ய வேண்டும்)

மார்பில் வலி இல்லாது சிலரில் ஒரு மார்பகமோ அல்லது இரண்டு மார்பகங்களிலுமோ அசாதாரணமான பாரமான தண்மையை உணர்தல், மார்பகத்தில் எரிவு, ஒருவகை இறுக்கமான உணர்வு, அசௌகரியம் என்பன மட்டுமே தோன்றுவதும் இந்த வகையையே சாரும்.

இந்த வலி அல்லது அசௌகரியம் தொடர்ச்சியாக இருக்கலாம் அல்லது விட்டு விட்டு வரலாம். உங்களது நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூராக அமையலாம்.

இதனை 3 வகையாக பிரிக்கலாம்.
1. மாதவிடாய் சக்கர சுழற்சி சார்ந்து மார்பில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம்:

பொதுவாக பெண்களில் காணப்படுவது இந்த வகைக்குரியது.
மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஓமோன்களின் மாற்றங்களால் ஏற்படுகிறது. மாதவிடாய் சக்கரத்தின் பிந்திய இரண்டு வாரங்களில் வலி அல்லது அசௌகரியம் அதிகரித்து பின்னர் குறைவடையும்.

அறிகுறிகள்:
மார்பு முழுக்க வலி அல்லது அசௌகரியம் இருக்கும்.

பொதுவாக வலி அல்லது அசௌகரியம் இரண்டு மார்பகங்களிலும் ஏற்படும். சிலருக்கு ஒரு மார்பகத்தில் ஏற்படலாம்.

மாதவிடாய் சக்கரத்துடன் மாதம் மாதம் ஏற்படும்.

கற்பம், பாலூட்டும் காலம், மாதவிடாய் நிற்பதை அண்மிக்கும் காலம், ஓமோன் மருந்துகள் பாவிக்கும் காலங்களில் இது ஏற்படும்.

கொழுப்பு உணவுகள், கெபைன் உட்கொள்ளல் (உதாரணம்:‌ கோப்பி,தேயிலை, சொக்லட், உற்சாக பானங்கள், சோடா, சில ஐஸ் கிரீம்கள், சில மருந்துகள் ), சில மருந்துகளின் பாவனை‌ என்பன‌ இந்தவகை நோவை அல்லது அசௌகரியத்தை அதிகரிக்கும்.

2. மாதவிடாய் சக்கர சுழற்சி சாராது மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம்:
மாதவிடாய் சக்கரத்தில் ஏற்படும்‌ ஓமோன்களின் அளவு மாற்றம் சாராமல் மார்பகங்களின் அதிக பருமன், மார்பகங்களில் நீர்க் கட்டிகள், கற்பம், மார்பகங்களில் அடி படுதல் (உதாணமாக குழந்தைகள் விழுதல், அடித்தல், வாகன சீட் பெல்ட் இறுக்கம், அதிக இறுக்கமான ஆடைகள் அணிதல், அதிக தளர்வான அல்லது அதிக இறுக்கமான‌ உள்ளாடை ), மார்பக கட்டிகள், கிருமித்தொற்று, சேல் கட்டி, மார்பகங்களில் சத்திர சிகிச்சை, மார்பக தோலின் இரத்தக்குழாய்களில் ஏற்படும் மாற்றங்கள், மார்பக புற்று நோய் போன்ற பொதுவான காரணங்கள் மற்றும் இன்னும் பல காரணங்களால் ஏற்படுகின்றன.

அறிகுறிகள்
பொதுவாக ஒரு மார்பகத்தில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படும்.

தொடர்ச்சியான அல்லது விட்டு விட்டு வலி ஏற்படலாம்.

கிட்டத்தட்ட 5 வீதமானோரில் இது மார்பக புற்றுநோயின் அறிகுறியாகவும்‌ அமைகிறது.

3. மார்பகத்தில் அல்லாது உடலின் வேறு தொகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளின் விளைவினால் மார்பகத்தில் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம்:
இங்கே பிரதான பிரச்சினை வேறு எங்கோ இருக்க, இதன்போது உருவாகும் சில இரசாயனங்கள் இரத்தத்தில் கலந்து மார்பில் ஏற்படும் சில மாற்றங்களால் மார்புவலி அல்லது அசௌகரியம் ஏற்படுகிறது.
உதாரணமாக பின்வரும் பொதுவான நோய் நிலைகளின் போது இவ்வாறு‌ மார்புவலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம்
பித்தப்பை கல் நோய், இதய நோய்கள், சுவாச மென்சவ்வு நோய்கள்,உணவுக்கால்வாயின்‌ பகுதகளில் ஏற்படும் சில நோய்கள், தசை மற்றும் எலும்பு சார்ந்த நோய்கள், கழுத்து எலும்பில் ஏற்படும் நோய்கள்.

உள நோய்களுக்கும் ஏனைய சில நோய்களுக்கும் சில மருந்துகளை பயன்படுத்தும் காலத்திலும்‌ இந்த நோவு அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.

அறிகுறிகள்
வேலைகள் செய்யும்போது மாத்திரம் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அது தசை, எலும்பு‌ அல்லது இதயம் சார்ந்த நோய்களால் ஏற்பட்டதாக அமையலாம்.

அல்சர் நோய் உள்ளோரின் உணவுக் கால்வாயில் ஏற்படும் நோவு மார்பக நரம்புகளுக்கு பரவுவதால் இந்த மார்பக வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.

அத்தோடு மன அழுத்தம் மற்றும் அதிக பதற்றம் அல்லது அச்சம் கொண்டவர்களில் காரணமின்றி இந்த மார்பு வலி அல்லது அசௌகரியம் அவதானிக்கப்படுகிறது.

உங்களது மார்பக வலி எதனால் ஏற்பட்டது?‌ அது பாரதூரமான‌ நோயின் அறிகுறியா?‌ என்பதை அறிய‌ முறையான வைத்திய ஆலோசனை மற்றும் முறையான வைத்திய பரிசோதனை அவசியம்.

பரிசோதனையின் பின்னர் பிற காரணிகள் இன்றி ஓமோன் மாற்றங்களால் ஏற்படும் மார்பக வலி அல்லது அசௌகரியம் எனில் அதனை கட்டுப்படுத்த அல்லது குறைக்க‌ என்ன செய்யலாம்?
1. பொருத்தமான அளவுடைய உள்ளாடையை பொருத்தமான அளவு இறுக்கமாக அணிதல்: இதனால் மார்பகத்தின் தோலையும் நெஞ்சுத் தசையையும் இணைத்து மார்பை தாங்கி இளமையில் மார்பின் வடிவத்தை தரும் கூப்பர் லிகமன்ட் எனும் சவ்வு அளவுக்கதிகமாக இழுபடாமல் தடுக்கப்படும். அவ்வாறு இழுபடுவதனால் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம் தவிர்க்கப்படும்.

2. அதிக அச்சம் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் மன அமைதியை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுதல்:‌ உதாரணமாக யோகா,‌ நண்பர்களுடன் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்

3. உடற்பயிற்சி:‌ உடல் எடையை குறைத்து மார்பின் மேலதிக கொழுப்பை குறைத்து மார்பின்‌ அளவை குறைக்கும். இதனால் வலி குறையும்.

உடற்பயிற்சியின்‌ போது சுரக்கப்படும் என்டோபின் எனும் இரசாயனம்‌ மார்பக வலியை குறைக்கும்.

4. கெபைன் மற்றும் மெதைல்சான்தினை கொண்ட‌ உணவுகளை கட்டுப்படுத்துதல்.
உதாரணமாக:‌சொக்லட்,தேயிலை, குளிர்பானங்கள், இறைச்சி போன்ற கொழுப்பு உணவுகள் என்பன.

5.எத்தகைய‌ உணவை அதிகம் உண்ண வேண்டும்?
நார்ச்சத்துள்ள இலைக் கறிகள், பழங்கள்
தானியங்கள்
நட்ஸ் ( தாவர விதைகள்)
மீன்கள்
சமையலுக்கு ஒலிவ் ஒயில் பயன்படுத்துதல்

6. உப்பை குறைக்கவும்:‌ உப்பானது‌ உடலில் நீரை தேக்கி வைக்கும். இதனால் மார்பக திசுக்களுக்குள் நீர் தேக்கி ஏற்படும் வீக்கம் மற்றும் பார்த்தால் மார்பக வலி அல்லது அசௌகரியம் அதிகரிக்கும்.

7. சீனி‌ உட்கொள்வதை கட்டுப்படுத்துதல்:
சீனியானது நீரை தேக்கி வைத்திருக்கும், மார்பக திசுக்களினுள் அசாதாரன மாற்றத்தை ஏற்படுத்தும் (inflammation), இரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே மார்பக வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும்‌.

முறையான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனையின் பின்னர்
காரணத்திற்கு ஏற்ப ஸ்கான், மம்மோகிறபி,‌‌ எம்.ஆர்.ஐ. போன்ற மேலதிக பரிசோதனைகளும்
இன்னும் தேவைப்பட்டால் FNAC எனும்‌ சந்தேகத்திற்குரிய இடத்தில் உள்ள கலங்களை நுணுக்குக்காட்டி மூலம் பரிசோதித்தல் மற்றும் பயோப்சி பரிசோதனைகளும் தேவைப்படலாம்.

காரணத்திற்கு ஏற்ப மேலதிக மருந்துகள், ஏனைய‌பரிசோதனைகள்‌
மற்றும் மேலதிக சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

நன்றி
டொக்டர் MNF. Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

இளவயது பெண்கள் பலர் அடிக்கடி வந்து சொல்லும் விடயம்1. எனக்கு சிறுநீர் அடிக்கடி போகுது, போரப்போ கொஞ்சம் எரிவு இருக்கு.யூரி...
01/11/2025

இளவயது பெண்கள் பலர் அடிக்கடி வந்து சொல்லும் விடயம்
1. எனக்கு சிறுநீர் அடிக்கடி போகுது, போரப்போ கொஞ்சம் எரிவு இருக்கு.
யூரின்ல கிரிமி வளத்து பார்க்குற டெஸ்ட் (Culture) எல்லாம் திரும்ப திரும்ப செஞ்சி பாத்தாச்சி.
ஒன்றும் இல்லை எண்டுதான் ரிப்போர்ட் வருது.

ஸ்கானும் செஞ்சி பாத்தாச்சி. ஒரு பிரச்சினையும் இல்ல என்றுதான் சொல்றாங்க..
நிறைய மருந்தும் பாவிச்சி பாத்துட்டேன் ஒன்றுக்கும் சரிவருதில்ல.... என மனவேதனைப்பட்டு நிப்பார்கள்.....

2. இன்னும் சிலர்... எனக்கு வெள்ளை படுது‌. என்ன ட்ரீட்மென்ட் செஞ்சாலும் நிக்குது மில்லை..... என வேதனைப்படுவார்கள்.....

இத்தகைய நிலைக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் பொதுவாக சேர்விசைட்டிஸ் எனப்படும் கருப்பை வாய் அழற்சி என்ற நிலையே பெரும்பாலானவர்களின் இந்த இரண்டு நிலைக்களுக்கும் காரணமாக இருப்பதை நாம் அவதானிக்கிறோம்....

#சேர்விசைட்டிஸ்
எனப்படும் கருப்பை வாய் அழற்சி/வீக்கம்

பெண்களின் கருப்பை 3 பிரதான பகுதிகளாக பிரித்து நோக்கப்படுகிறது. கருப்பையின் கீழ்ப்பகுதியும், பிறப்பு துவாரத்தினுள் திறப்பபதுமான பகுதியையே சேர்விக்ஸ் (கருப்பை வாய்)‌ என அழைக்கப்படும்.

இந்தப்பகுதியில் கிருமி தொற்றுவதால் அல்லது கிருமித்தொற்று அல்லாமல் அந்தப் பகுதியில் அழற்சியை ஏற்படுத்தும் வேறு பல காரணங்களினால் ஏற்படும் மாற்றங்களினால் இந்த அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டிய தேவை, சிறு நீர் கழிக்கும் போது எரிவு மற்றும் நோவு, அசாதாரண வெள்ளை படுதல் என்பவற்றுக்கான பொதுவான ஓர்‌ காரணமாக உள்ளது.

கற்பப்பை வாய், பிறப்பு துவாரம் மற்றும் சிறுநீர் வழி ஆகியன மிகவும் நெருக்கமாக அமையப்பெற்றிருப்பதே இந்நிலையின் போது‌ சிறுநீர் எரிவு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுவதற்கான பிரதான காரணம் ஆகும்.

இந்த கருப்பை வாயில் சில பற்றீரியாக்கள், பங்கசுக்கள், பாலியல் நோய் சார்ந்த நுண்ணியிர்கள் என்பன தொற்றுவதால் இந்த நிலை ஏற்படலாம்.

அவ்வாறு நோய்த்தொற்று இல்லாமல்
ஓர் அழற்சி நிலையை‌ ஏற்படுத்துவதனூடாக ஏற்படும் மாற்றங்களூடாகவும் இத்தகைய நிலை ஏற்படலாம்.
அவ்வாறான அழற்சியை ஏற்படுத்தும்‌ பொதுவான காரணிகள்
1. மாதவிடாய் பேட், கப், துணி என்பவற்றேக்கு ஏற்படும் அழற்ச்சி
2. சில சோப்கள்
3.‌ வாசனை திறவியங்களின் பயன்பாடு
4.‌ தாம்பத்தியத்திற்கு பயன்படுத்தும்‌ சில கிறீம்கள், உறைகள் மற்றும் ஜெல் போன்ற பதார்த்தங்களுக்கு ஏற்படும் அழற்சி
5. சுகாதாரமற்ற தாம்பத்திய உறவு செயற்பாடுகள்
6. கற்பப்பை இறக்கத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தும் வலையங்களால் ஏற்படும் அழற்சி
7. அளவுக்கதிகமாக நீண்ட நேரம் இடுப்புக்கு கீழே கழுவுதல்
8. அடிக்கடி நீண்ட நேரம் மூழ்கிக் குளிப்பதால் ஏற்படும் பாதிப்பு.
(உதாரணமாக: பப்ள் பாத்)
8. சில நோய்கள், விபத்துக்கள், கிருமித்தொற்றுகள், சிகிச்சைகளால் உடலில் ஓமோன்களில் ஏற்படும் மாற்றங்கள்

9.‌ ஆடைகளின் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பதார்த்தங்களுக்கு‌ ஏற்படும் ஒவ்வாமை.
10. ஒன்றுக்கு மேற்பட்ட துனைவர்/துனைவிகள்..
11. பாலியல் நோய்கள்

கருப்பை வாய் அழற்சியின் பொதுவான அறிகுறிகள்
1. பிறப்பு துவாரத்தினூடாக சலி படும் அளவு, நிறம், வாசனையில் மாற்றம்.
2. மாதவிடாய்க்கு இடைப்பட்டதாக வலியுடனோ, வலி இல்லாமலோ இரத்தம் படுதல்.

3. தாம்பத்திய உறவின் போது அசாதாரண வலி
4. தாம்பத்திய உறவின் போது அல்லது அதன் பின்னர்‌ இரத்தம் கசிவு.
5.கடி மற்றும் சொறிச்சல்
6.சிறுநீர் எரிவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
7. அடிவயிறு நோவு
8. சிலருக்கு முதுகு வலி
9. காய்ச்சல், இடுப்பு வலி
10.‌ கற்பப்பைக்கு கிருமி தொற்றுதல்/கற்பப்பை அழற்சி
11. கற்பகாலத்தில் தாய்க்கும் குழந்தைக்கு கிருமி தொற்றுதல்.
12. குறை பிரசவம்.

இந்த நிலை ஏற்படுவதை தடுக்க‌ /‌குறைக்க என்ன செய்ய வேண்டும்...
1. மாதவிடாய்க்கு கொட்டன் (cotton) பேட் மற்றும் துணி பயன்படுத்துதல், உரிய வேலைக்கு அவற்றை மாற்றுதல்.

2. பொருத்தமான சோப்பை அளவாக பயன்படுத்துதல்.
3. நீரில் அடிக்கடி நீண்ட நேரம் மூழ்கிக் குளிப்பதை தவிர்த்தல்.
4. இடுப்புக்கு கீழான பகுதிக்கு அளவுக்கதிகமான வாசனை திரவியங்கள், கிரீம்களின் பயன்பாட்டை தவிர்த்தல்.

5. சுத்தமான கொட்டன் உள்ளாடைகள் அணிதல்.
6. அளவுக்கதிகமான நீர் பாவனையை தவிர்த்தல்.
7. சுகாதாரமான முறையில் தாம்பத்திய உறவு

உரிய நேரத்தில் பொருத்தமான சிகிச்சை பெறாவிட்டால் என்ன நிகழும்?
இடுப்புக்குழியினுள் கிருமி பரவலாம்.

பலோப்பியன் குழாயில் கிருமித்தொற்று. அதனால் நாட்பட்ட வயிறு வலி, இடுப்பு வலி, காய்ச்சல், மாதவிடாய் கோளாறு, கற்பப்பைக்கு வெளியே கருக்கட்டி வெடித்து உயிர் ஆபத்து, கற்பம் தரிப்பதில் சிக்கல்....

துர்நாற்றமுள்ள வெள்ளை படுதல்..

சிறுநீர் எரிவு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை

மன உளைச்சல்.
தாம்பத்திய உறவில் சிக்கல்கள்.
கற்பகாலத்தில் குழந்தைக்கும், தாய்க்கும் கிருமி தொற்று.
குறை பிரசவம்...

மேலே கூறப்பட்ட முறைகளை கடைப்பிடிக்கும் அதை வேளை பொருத்தமான வைத்திய பரிசோதனை மூலம் காரணத்தை அறிந்து உரிய சிகிச்சையை செய்வதன்மூலம் நாளடைவில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

காரணத்திற்கு ஏற்ப உங்களுக்கு மாத்திரமோ அல்லது கனவன் மனைவி இருவருக்கும் ஒரே காலப்பகுதியில் சிகிச்சைகள் வழங்கப்படும்.

நன்றி
டொக்டர் MNF. Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை.

தாயார் ஒருவர் ஓ எல் படிக்கும்‌ மகளை‌ அழைத்துக் கொண்டு வந்தார்.இருங்கம்மா... என்ன பிரச்சினை?இவக்கு சேலைன் போடனும்.ஏன்?இல்...
04/10/2025

தாயார் ஒருவர் ஓ எல் படிக்கும்‌ மகளை‌ அழைத்துக் கொண்டு வந்தார்.

இருங்கம்மா... என்ன பிரச்சினை?
இவக்கு சேலைன் போடனும்.

ஏன்?
இல்ல அவக்கு அடிக்கடி சேலைன் போடுறதான்...

இந்த வயசுல ஏன் அடிக்கடி சேலைன் போடுறிங்க?
இல்ல அவக்கு சரியான‌ டயர்ட். தூங்கி தூங்கி தான் திரிர....
முதலெல்லாம் நல்லா மார்க்ஸ் எடுக்குற... இப்ப நைட் டியுசன்‌‌ முடிஞ்சு 9‌ மணிக்கு வந்தா ஒன்டும் சாப்டாம படுத்தா‌ காலைல ஸ்கூல் போகத்தான் எழும்புற...... கேட்டா டயர்டா இரிக்கி, தூக்கமா இரிக்கி, பசி இல்லாம இரிக்கி என்டு கிழவிமாரு மாதிரி சொல்லுவா‌..

நிறைய வைத்தியமும் செஞ்ச தான் ஒன்டுக்கும் செரி வரல..

இப்ப கிழமைல 2 தரம் சேலன் போடுற என வருத்தத்துடன்‌ சொன்னார் தாயார்.

மார்க்செல்லாம் குறஞ்சிட்டே போகுது. எக்சாமும் வருது அதான் உரத்த பயம்‌ என தொடர்ந்தார்.

பிள்ளையுடன் பேசி, பரிசோதித்த வகையில் வேறு பிரச்சினைகள் இல்லை என்பதனை உறுதி செய்ததோடு...... அளவுக்கதிகமான டியுசன், தூக்கமின்மை மற்றும் எக்சாம்‌ ஸ்ட்ரெஸ் என்பவற்றால் ஏற்பட்டுள்ள சிறிய‌ மன அழுத்தம் மற்றும் அல்சர் காரணமாகவே இந்த வயதில் இந்த நிலை என்பது தெளிவாகியது...
பிள்ளையும் அதனை ஏற்றுக்கொள்ளவே.... தேவையற்ற டியுசன்களை நிறுத்திவிட்டு போதிய ஓய்வுடன், உரிய வேலைக்கு உணவு, நித்திரை‌ என வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி... தகுந்த மருந்துகளையும்‌ வழங்கி தொடர்ச்சியாக பராமரித்து வந்த நிலையில் அவரது பிரச்சினை முழுமையாக இல்லாமல் ஆகி பரீட்சையில் நல்ல பெறுபேறும் வந்தது.

#அல்சர் #அல்சர்
இன்றைய காலத்தில் பரவலாக காணப்படும் ஓர் பிரச்சினை. அதிகமானோருக்கு நமக்கு அல்சர் இருப்பது தெரியாமல் வெவ்வேறு வியாதிகள் என நினைத்து பல வைத்தியங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

#அல்சர் நோயின் பொதுவான அறிகுறிகள் ( எல்லோருக்கும் தெரிந்த அறிகுறிகள்)
1. நெஞ்செரிவு
2. வயிறு எரிவு
3. அதிகளவான‌ ஏப்பம்
4. உணவு செமிக்காமை
5. எண்ணைத் தன்மையான, உரைப்பான உணவுகளை உண்ணும்போது வயிறு நோவு
6. சாப்பிட்ட பிறகு வயிறு ஊதுதல்

இவற்றை தவிர முக்கியமான பல அறிகுறிகள் உள்ளன.
1. சாப்பாட்டில் விருப்பமின்றிய நிலை
2. எடுத்த சாப்பாட்டில் கொஞ்சம் சாப்பிட்ட பிறகு மீதியை உண்ண முடியாமை,
சாப்பிட்ட உடன் வாந்தி எடுத்தல்....

3. சிலருக்கு சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே திரும்ப பசிக்கிறது
4. உடல் சோர்வான நிலை
5. உடல் ஆட்டமாக இருத்தல்.
6. சாப்பாட்டு நேரம் நெருங்கும்போது நெஞ்சு படபடப்பு
7. எவ்வளவு சாப்பிட்டாலும்‌ என்னத்த சாப்பிட்டாலும் உடலில் சத்தில்லாமல் பலகீனம்.

8. சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டிய உணர்வு மற்றும் தேவை ஏற்படுவது
9. சாப்பிட்ட பிறகு சாப்பாடு எரிஞ்செரிஞ்சு‌ மேல வந்து நெஞ்சுக்குள்ள பொறுக்குறது மாதிரி உணர்வு.

10. வாய் புளிப்பாக இருப்பது போன்ற‌ உணர்வு
11. சாப்பிடும்போது சாப்பாடு தொண்டையில் பொருத்து நிற்பது போன்ற உணர்வு‌ ( புற்று நோய் போன்ற பாரதூரமான காரணிகள், தைரொய்ட் வீக்கம் போன்ற மேலும் பல காரணிகளை இல்லை என உறுதி செய்ய வேண்டும்)

12. சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை ஏற்படுவது.
13. தூங்கி எழும்பும் நேரம் குரல் அடைத்துவிட்டது போல் ஏற்பட்டு சிறிது நேரம் பேச முடியாத நிலை
14. இரைப்பை அல்சருக்கு சாப்பிட்ட உடன்‌ எரிவு கூடுவது.
சிறுகுடல் அல்சருக்கு சாப்பிட்டு‌ இரண்டு மணி நேரத்துக்கு பின்னர்‌நோவு வரும். அந்த நேரம்தான் இரைப்பையில் உள்ள உணவு சிறுகுடலை அடையும். ஆனால் இரைப்பை காலி ஆவதால் பசி உருவாகும். இதனால அடிக்கடி சாப்பிட்டு‌ உடம்பு கூடிட்டே போறது.....

15. சிலருக்கு என்னத்த திண்டாலும் உடம்பு மெலியுதுதான் என்ற நிலை
16. காரணமே இல்லாத தீராத தலையிடி. இது பொதுவாக சாப்பாட்டு நேரங்களை அன்மித்த நேரத்தில் அதிகமாக இருக்கும்.
17. அதிக கோபம்‌ ஏற்படுதல்
18. கவனச் சிதறல் : படிக்கிறதான் ஆனா... மார்க்ஸ் வருதில்ல....
க்ளாஸ்ல நித்திரை....
எங்க எத வெச்ச என்டு ஞாபகம் இல்லை போன்ற சூழ்நிலை.

19. காரணமே இல்லாமல் தொடர்ச்சியான இருமல், தொண்டை கரகரப்பு
20. இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது தொண்டை அடைப்பது போன்ற‌ உணர்வு.

#வராமல் #தடுக்க என்ன செய்ய வேண்டும்
1. பசித்த உடன் ஆரோக்கியமான உணவு
2. உடற் பயிற்சிகள்
3. உரிய நேரத்திற்கு போதியளவு தூக்கம்.
4. புகைத்தல், மதுபாவனையை முற்றாக தவிர்த்தல்.
5. மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக இருத்தல்.
6.போதியளவு நீர் அருந்துதல்
7. டொக்டர் அறிவுரைகள் இன்றி நோவுக்குரிய மருந்துகள் மற்றும் இதர மருந்து பாவனைகளை தவிர்த்தல்.
8. நார்ச்சத்து உணவுகளை உண்ணுதல்

அல்சர் நோய் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மேலே கூறிய‌ அறிவுரைகளை பின்பற்றுவதோடு டொக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.....

அல்சர் நோய் குணமாக்கக் கூடியது என்றபோதிலும், நீங்கள் மருந்து செய்யும் முறை மற்றும் உங்களது வாழ்க்கை முறைக்கு ஏற்ப குணப்படுத்த முடியாத நிலைக்கு செல்லலாம்.

அல்சர் நோயால் புற்று நோய் ஏற்படுமா?
ஆம்.
எச்-பைலோரை என்ற பற்றீரியாவானது உங்களது அல்சர் புன்னில் தொற்றி காலப்போக்கில் அந்த இடத்தில் புற்றுநோயை உருவாக்கலாம்....

நன்றி
டொக்டர்‌ MNF. முப்லிஹா
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை.

இளம் பெண் ஒருவர் தயங்கித் தயங்கி வந்தார். இருங்கம்மா ஏன் பயப்படுறமாதிரி இரிக்கிங்க?இல்ல அப்புடி ஒன்னுமில்லை.சரி இருங்க.....
07/09/2025

இளம் பெண் ஒருவர் தயங்கித் தயங்கி வந்தார். இருங்கம்மா ஏன் பயப்படுறமாதிரி இரிக்கிங்க?
இல்ல அப்புடி ஒன்னுமில்லை.

சரி இருங்க....
அவர் இருப்பதற்கு சற்று சிரமப்படுவதை அவதானித்தேன்.
அத்தோடு அவரது பின் பகுதியை‌ கதிரையில் சமமாக வைக்காமல் ஒரு பக்கம் சாய்வாக இருப்பதை அவதானித்தேன்.
பிரச்சினை அங்குதான் உள்ளது என்பது புரிந்தது.

சரி என்ன பிரச்சினை?
அது ... அது...
பயப்படாதிங்கம்மா.....
நீங்க சொன்னால்தான்... அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்டு பார்க்கலாம்....

இல்ல எனக்கு தூக்கம் வாரல ஒழுங்கா....
எத்தன நாளா? கொஞ்ச நாளா அப்புடித்தான்

சரி.... பகல்ல கூட தூங்குரிங்களா?‌
வீட்ல தனியாவா?
பிள்ளைகளால தூங்க கஷ்ட்டமா? இப்படி எல்லா கேள்விகளுக்கும் இல்லை என்றே பதில் வந்தது.

சரிம்மா நோர்மலா இருக்க கஷ்ட்டப்படுரிங்கலே அது ஏன்? பின்பக்கம் என்ன பிரச்சினை என நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்.

இல்ல மலவாசல் சரியா கடிக்கிர சொரிஞ்சி காயம். பூச்சி குளுச, கிரிம் எல்லாம் வாங்கி பாவிச்சி பாத்த ஒன்டுக்கும் சரிவரல..

அப்ப அந்த சொரிச்சலாலதான் தூக்கம் இல்லை.... இனி சொரிஞ்ச காயத்தால நோர்மலா வேலைகள் செய்ய ஏலாது...
நோர்மலா இருக்க ஏலாம போனா மன‌ உளைச்சல் வரும்..... திரும்ப அதால நித்திரை வராது....
இப்படியே பிரச்சினைகள் கூடிக்கொண்டே போகும். இதுதான்‌ உங்கட பிரச்சினை. கவலப்படாதிங்க

சரி பயப்படாதிங்க..
ஒருக்கா கடிக்கிற பகுதிய பாத்துட்டு என்ன செய்யலாம் என்டு சொல்றன்...

பரிசோதித்துப் பார்த்தால் அங்கே இருந்தது பைல்ஸ் என பொதுவாக அழைக்கப்படும் மூல வியாதி.........

#மூல #வியாதி = #பைல்ஸ்= #ஹெமரொய்ட்
மலவாசல் மற்றும் மலக்குடல் என்பவற்றின் தொழிற்பாட்டுக்காக இயற்கையாகவே அந்த பகுதிகளில் அதிகளவு இரத்த நாளங்கள் உள்ளன.

பல்வேறு காரணங்களால் இந்த இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது இந்த இரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளே இந்த மூல வியாதியாகும் (கால்களில் ஏற்படும் வரிக்கோஸ் போல).

மல‌ வாசலின் உள் பகுதியில்‌ உள்ள இரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால் உள்-மூல வியாதி எனப்படும்.
இது உங்களது‌ கண்ணுக்கு தெரியாது.
விரலை விட்டு பரிசோதிக்கும் போது அல்லது சில உபகரணங்கள் கொண்டு பரிசோதிக்கும் போது கண்டறிய முடியும்.

இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப இது‌ 4‌ நிலைகளாக பிரிக்கப்படும்.

1ம் நிலை:‌ இரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு மலத்துடன் இரத்தம் வரும்.

2ம் நிலை: மலம் கழிக்கும் போது, பாதிக்கப்பட்ட இரத்தக் குழாய்கள் வெளியே வந்து தானாக மீண்டும் உள்ளே செல்லும்.

3ம் நிலை: மலம் கழிக்கும் போது வெளியே வந்த இரத்தக் குழாய்கள் தானாக உள்ளே செல்லாமல் நீங்கள் விரல்களால் தள்ளும்போது உள்ளே சென்றுவிடும்.

4ம் நிலை: வெளியே வந்த இரத்தக் குழாய்ளை தள்ளினால் கூட உள்ளே செல்லாமல் கட்டி போல் தொடர்ச்சியாக வெளியே இருக்கும்.

இந்த மூன்றாம், 4ம் நிலைகள் அதிக வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

வெளிப்பகுதி இரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால் வெளி-மூல வியாதி ஏற்படும். இது பொதுவாக கடி, சொரிச்சல், நோவு என்பவற்றை ஏற்படுத்துவதோடு மலவாசலை சூழ ஓர் கட்டி போன்ற அமைப்பு இருக்கும்.
ஒரு இடத்தில் இருப்பது கஷ்ட்டம்.

மலம் இறுக்கமாக இருக்கும், மலத்துடன்‌ இரத்தம் வரலாம், மலவாசலில் சளி படுதல், மலவாசலில் சொரிச்சல்/கடி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

மூல வருத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள்
1. நீண்டகால மலச்சிக்கல்
2. புகைத்தல்
3. மலம் கழிப்பதற்கு அதிக நேரம் முக்குதல். உதாரணம்:மலம் கழிக்கும் போது தொலைபேசி பாவனை, பேப்பர் வாசித்தல்
4. அதிக உடற்பருமன்
5. குழந்தைப்பேறில் ஏற்படும் பிரச்சினைகள்
6. அதிகளவான குழந்தைப்பேறு
7. தீராத இருமல்
8. குந்தி எலும்பி வயிற்று ப்ரசரை அதிகரிக்கும் தொடர்ச்சியான வேலைகள்.
9. உடற்பயிற்சியின்மை
10. போதியளவு நீர் அருந்தாமை.
11. கற்பகாலத்தில் ஏற்படும் ஓமோன் மாற்றங்கள் மற்றும் கற்பப்பையால் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அழுத்தம்.
12. மலத்தை அடக்கி தாமதப்படுத்துதல்

மலச்சிக்கலை எவ்வாறு கட்டுப்படுத்துவது
1. ஆரோக்கியமான‌ உணவு முறை
இலைக்கறிகள், பழங்கள், நார் உணவுகள், நீர்ச்சத்தான உணவுகளை உண்ணுதல்.

Fast food மற்றும் spicy foods ஐ தவிர்த்தல்.

2. சீரான, தொடர்ச்சியான‌ உடற்பயிற்சி

3. டொய்லட்டில் மலம் கழிக்க செல்லும்போது டெலிபோன், பேப்பர்‌ மற்றும் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தாமல் குறுகிய நேரத்திற்குள் மலத்தை கழித்துவிட்டு சுத்தம் செய்து வெளியேறுதல்.

4. இயலுமானவரை மலத்தை அடக்காமல், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் போதே தாமதமின்றி அதனை நிறைவேற்றுதல்.... தாமதிக்கும் காலத்தில் மலத்தில் உள்ள நீரானது குடலால் உறுஞ்சப்படுவதால் மலம் இறுகும்.

நம்நாட்டின் வேலைத் தளங்கள் மற்றும் பொது இடங்கள், பிரயாணத்தில் மலசலகூடம் பாவிப்பது சிரமமான‌ ஒன்றே...

மூல வருத்தம் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்
1. பொருத்தமான வலி நிவாரணி
2.‌ வாழ்க்கை முறையில் மாற்றம்
3.பொருத்தமான ஏனைய மருந்துகள், கிரீம்கள்.
4. Sitz bath: இடுப்புவரை இளஞ்சூடான அல்லது உப்பு நீருக்குள் 15-20 நிமிடங்கள் அமர்ந்து இருத்தல்.
இது நோவையும் மலக்குடல் இரத்தநாள வீக்கத்தையும் குறைக்கும்.

ஆரம்ப நிலைகள் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் மூலம் குணப்படுத்தக் கூடியதாக அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியதாக இருக்கும்.

கடுமையான நிலையில் சத்திர சிகிச்சைகள் தேவைப்படும்.

நன்றி
டொக்டர்:‌MNF. முப்லிஹா
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை

மட்டக்களப்பில் குழந்தைகள் வாட்டில் ட்ரைனிங் எடுத்துக்கொண்டிருந்த காலம் அது.ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் எ...
05/08/2025

மட்டக்களப்பில் குழந்தைகள் வாட்டில் ட்ரைனிங் எடுத்துக்கொண்டிருந்த காலம் அது.

ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் எவ்வளவு சோர்வு இருப்பினும் மழலை முகங்களையும் அவர்களது குறும்புகளையும் காணும்போது அவை யாவும் பறந்தோடி விடும்.

ஆனாலும் ஒரு பக்கம் சீரியஸான வருத்தத்தால் அட்மிட் ஆகி துடிக்கும் குழந்தைகளை காணும் போது சற்று விரக்தியும் ஏற்படும்.

எது எப்படியிருப்பினும் நம்மை நாமே தேற்றிக்கொண்டு வேலை செய்துதானே ஆக வேண்டும்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் நைட் டியூட்டியில் பயிற்சியில் இருந்த ஒரு நாள் அதிகாலை 3 மணியளவில் அசதியில் கதிரையில் தூங்கிக்கொண்டிருந்த நேரம்‌ வாட்டின் போன் சத்தம் அளர்ந்தது.

உடனே திடுக்கிட்டு ரிசீவரை தூக்கி...
ஹலோ பீடியாட்ரிக் கெசுவால்ட்டி வாட் என்றதும்....
அடுத்த பக்கத்தில் ஈட்டீயூ டொக்டர்
"‌ பெப்ரைல் கன்வல்சன் எமர்ஜென்சி...
கம் வித் ஒன்கோல் சீனியர்‌ என்றார்.

ஒன்கோல் ரெஜிஸ்ட்டாரையும் அழைத்துக்கொண்டு‌ ஈட்டீயூ வுக்கு ஓடினோம்.....

ஏறத்தாழ 4 வயதுடைய பிள்ளை ஒன்று‌ வலிப்பு நிற்காமல் கால் கைகளை இழுத்தவாறு பக்கத்து ஹொஸ்ப்பிட்டல் ஒன்றிலிருந்து அம்புலன்சில் அனுப்பப்பட்டிருந்தாள்.

ஈட்டியூவுக்குள் உள்நுழையும்போது
அவள் தனது இரண்டு கால்களையும், கைகளையும் இழுத்துக்கொண்டிருந்தாள்.
அருகே செல்லும்போதே‌ குழந்தையின் உடல் சூடு என் முகத்தில் ஒரு அனல் அருகே செல்வதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

அந்தக் குழந்தையை பொறுப்பெடுத்து
தேவையான மருந்துகளை வழங்கி வலிப்பை நிறுத்தி பிள்ளையை சீரியஸ் கன்டிசனிலிருந்து மீட்டெடுத்துவிட்டு பரிசோதனைகளுக்காக இரத்தமும் எடுத்துவிட்டு.... அம்மாவுக்கு ஆறுதல் கூறி‌ அவரது அழுகையை நிறுத்தச்செய்து அதன் பின்னர்‌ பேசிய போது‌
என்னம்மா என்ன நடந்த....?
சும்மா படுத்த பிள்ளக்கி வலிப்பு வந்துட்டு டொக்டர். எங்கட குடும்பத்துல ஒத்தருக்கும் இப்புடி யெல்லாம் வாரல....

சரி‌ பிள்ளைக்கி காய்ச்சல் இருக்குதே அது எப்ப வந்த?
அது முந்தநேத்துல இருந்து...

காச்சலோட இருமல் தடுமல் ஏதும்‌இருக்கா?
அது வழமயா புலுதிக்கி வார சலிக்காச்சல்தான்.... அதுக்கு ஊறல் போட்டு குடுத்த......
அது அடிக்கடி அப்புடி காச்சல் வாய்தான். நாளஞ்சி நாளையால சரியாயிடும் என்றார்....

கேட்கவேண்டிய ஏனைய‌ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பிள்ளையை பரிசோதித்த போது பிள்ளையின் காதில் கிருமி தொற்றி அதனால் அதிக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

முறையான மருத்துவம் செய்யப் படாமையால் அதிக காய்ச்சலால் வலிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது....

#காய்ச்சல் #வலிப்பு (பெப்ரைல்-கன்வல்சன்):

காய்ச்சல் என்பது நோயல்ல. எமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள், இரசாயனங்கள், கலங்கள் மற்றும் ஏனைய பதார்த்தங்களிலிருந்து எமது உடலை பாதுகாப்பதற்காக இறைவன் நமக்கு இயற்கையாக வழங்கியுள்ள நோயெதிர்ப்பு மண்டலம் எமது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் அத்தகைய பொருட்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பிக்கும் போது உற்பத்தி செய்யும் இரசாயனங்களின் விளைவே காய்ச்சல் என்ற அறிகுறியின் காரணமாகும்.

வளரும் குழந்தைகளின் உடல் வெப்பநிலை மாற்றத்தினால் வளர்ந்து வரும் பிஞ்சு மூளையின் கலங்களில் நிகழும் மின் பரிமாற்ற நிகழ்வுகளின் சமநிலை மிக இலகுவாக பாதிக்கப்படுகிறது.

மூளையின் சமநிலை குழம்பி மூளையில் இருந்து உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு வழங்கப்படும் செய்திகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தசைகளின் சமநிலை குழம்பி உடல் உறுப்புகள் இழுத்து வலிப்பு ஏற்படுகிறது.

5 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு வலிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணமாக இந்த காய்ச்சல் வலிப்பு காணப்படுகிறது.

குழந்தைகளின்‌ சாதாரண உடல் வெப்பநிலை 36.4பாகை செல்சியஸுக்கும் 37.5 பாகை செல்சியஸுக்குமிடையில் வேறுபடும்.

பொதுவாக காய்ச்சல் 38பாகை செல்சியஸை விட அதிகரிக்கும்போது இந்த வலிப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்பது ஆய்வுகளின் முடிவு.

குறிப்பு‌: ஆனால் அதனை விட‌ குறைவான காய்ச்சல் இருந்தால் அவ்வாறு வலிப்பு வராது என்று பொருளில்லை..

பரம்பரை காரணிகள், வைரஸ் கிருமி தொற்றுக்கள்,‌ வளர்ச்சிப் படிநிலை தாமதம், Zinc மற்றும் iron சத்து குறைவு மற்றும் குழந்தைக்கு ஏற்கனவே உள்ள நரம்புக் கோளாறுகள் என்பன இவ்வாறு வலிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்‌.

இவ்வாறு ஏற்படும் காய்ச்சல் வலிப்பு மூன்று‌ வகையாக பிரிக்கப்படும்.

1.‌ சாதாரணமான காய்ச்சல் வலிப்பு:
‌ 24 மணித்தியாலங்களுக்குள் ஒருமுறை மாத்திரம் வலிப்பு ஏற்படும்.
அவ்வாறு ஏற்படும் வலிப்பு 15 நிமிடங்களுக்குள் நின்றுவிடும். அத்தோடு இரண்டு கைகளும் கால்களும் இழுக்கும்.

பொதுவாக இந்த வகையான வலிப்புக்கு பொதுவான இரத்தப்பரிசோதனையை தவிர மேலதிக பரிசோதனைகள் தேவையில்லை.

ஆனால் கீழே உள்ள ஏனைய இரண்டு வகைக்கும் பல பரிசோதனைகள் தேவைப்படும்.
உதாரணமாக:‌ முள்ளந்தண்டில் குற்றி பாய்மம் எடுத்து பரிசோதித்தல், ஈஈஜி

2. சிக்கலான காய்ச்சல் வலிப்பு:
ஒரு முறை ஏற்படும் வலிப்பானது‌ 15 நிமிடங்களை விட அதிகம் நீடிப்பது... அல்லது 15 நிமிடங்களை விட குறைவாக நீடித்த போதிலும் 24 மணி நேரத்திற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட‌ தடவைகள் வலிப்பு ஏற்படுதல்.

உடலின் சில பாகங்கள் மாத்திரம் வலிப்பினால் இழுத்தல்.
உதாரணம்‌: ஒரு‌கை, ஒரு‌கால்.

3.‌ தீவிர‌‌ வலிப்பு நிலை (ஸ்டேட்டஸ் எபிளெப்டிக்கஸ்):
ஏற்படும் வலிப்பு 30‌ நிமிடங்களை விட அதிகம் நீடிப்துடன்‌ பாதகமான விளைவுகள் அதிகம்.

#வலிப்பு ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்?
அருகே உள்ளோரை உதவிக்கு‌ அழைத்துக்கொண்டே‌........
பிள்ளையின் அருகே உள்ள ஆபத்தான பொருட்களை அகற்றுங்கள்.
இரும்புச் சாவியோ ஆணியோ கையில் கொடுக்க வேண்டாம்.

பிள்ளையை இடப்புறமாக சரித்து விடுங்கள்.
பிள்ளையின்‌ இறுக்கமான‌ ஆடைகளை தளர்த்தி விடுங்கள்.

வலிப்பின்போது தலை அடிபடாமல், நாக்கு கடி படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அருகே உள்ள ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு செல்வதற்கு தயாராகுங்கள்.

5 நிமிடங்களை விட அதிகமாக நீடித்தால் அல்லது உதவிக்கு யாருமின்றி தனியே இருந்தால் உடனே ஹொஸ்பிடட்லுக்கு செல்லும் வழியை பாருங்கள்.

#காய்ச்சல் வலிப்பு வராமல் தடுப்பது/ ஆபத்தை குறைப்பது எவ்வாறு?

காய்ச்சலின் போது உடல் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
1. உடல் வெப்பத்தை குறைக்கும் மருந்துகள்
2.‌ நீர் ஒத்தடம்
3.‌ சிறிய மெல்லிய ஆடைகளை மட்டும் அணிவித்தல்.
4. மெல்லிய காற்றோட்டமான இடத்தில் வைத்திருத்தல்.
உதாரணம் : Fan காற்று
5. மெல்லிய உணவுகள்.
6. அதிகளவு நீர்‌ ஆகாரம்.
7. பிள்ளையை (ரெஸ்ட்டில் ) ஓய்வாக வைத்திருத்தல்.


எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம் டொக்டரின் உதவியுடன்‌ காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து அதனை குணப்படுத்துதல்....

நன்றி
டொக்டர் MNF. முப்லிஹா
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை.

Address

Valaichchenai

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. MNF. Mufliha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram