09/07/2023
🙏🌸☘️🌟🌹🌅🔥🌀🦚🌻🌴
*"உள்ளொளித் தியானம்"*
பாகம்:- 2
நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தான் இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவனாமே
------ திருமந்திரம்
ஒன்றை மறந்து மற்றொன்றை நினைந்து சதா அலைக்கழிக்கும் மனத்தை, இரட்டுற நிற்கும் அதன் தன்மையை ஒழித்து, நினைப்பு மறப்பற முழுமையான நாட்டத்துடன் புருவ நடுவிற் (நுனி மூக்காகிய பொட்டு வைக்கும் இடம்) *"கடவுளை தீபச்சுடர் வடிவத்தில்"* மனக்கண்ணால் உற்று உற்று நோக்கி, *"அகவுணர்வால்"* கலந்து கொள்ள வேண்டும். அப்போது இயல்பாகவே அடிக்கடி பிராண வாயுவானது மன ஓர்மையால் (உள்ளேயும் இழுக்கப்படாது, வெளியேயும் விடப்படாமலும்) நடுவே உலவி, அதாவது உயிர்ப்பு இடகலை, பிங்கலையில் இயங்காது சுழுமுனையில் நின்று, கடவுள் உண்மையை சிறிது சிறிதாக சாதகனுக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். தியானத்தில் அவ்வப்பொழுது உள்ளிழுக்கப்படும் சுவாசத்தின் நீள அளவும், வெளியே விடப்படும் சுவாசத்தின் நீள அளவும் சுருங்கி, குறைந்து, காற்று நுண்ணிய அளவே உள்ளே இருந்து நடுவே உலவிட, அதனால் மனத்தின் உண்முகப் பார்வை கூர்மையாகி உண்மை உணரலாம். மற்றபடி பிரணாயாமம் முதலான மூச்சுப் பயிற்சி செய்தும், மூச்சை அடக்கி தனது (சுய முயற்சியால்) சுழுமுனையில் நிறுத்த சமாதி கூடும். சமாதி பழக்கம் பழக்கம் அல்ல; சகசப் பழக்கமே பழக்கம்; சுத்த சன்மார்க்கத்தில் மூச்சுடக்கும் பயிற்சி கூடாது; அதனால் சமாதி கூடி மூடம் உண்டாகும்--- என்பது வள்ளலார் வாக்கு.
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.
----- திருமந்திரம்
புருவ நடுவில் தெய்வஜோதி தீப பாவனை செய்து உற்று உற்றுப் பார்த்தால் *"மெய் உணர்வு ஒளி"* வெளிப்படும். அதை அகக் கண்ணால் பார்த்துக் கலந்திடுதல் வேண்டும். அங்ஙனம் வெளிப்படவே திருவருள் வெள்ளப்பெருக்கு பள்ளமடையாய் பெருகும். அவ் அருள் வெளியில் அகண்ட வெளி முற்றும் நிரம்பிய கடவுள் உண்மை வெளிப்படும். இயல்பாகவே ஆன்ம சிதாகாசத்தில் பூரணமாய் பொருந்தியுள்ள கடவுள் உண்மையை (தானே தூய சிவம்) ஜீவனின் தற் சுதந்திரம் அற்றபோது, தன்னைத்தானே உணர்த்த, அதுவே ஆன்மாவாய் இருந்து உணர்ந்து கொள்கிறது.
10) *"தலை நடுவே விளங்கும் தனிப்பெரும் தலைவன்"*
இறைவன் ஒவ்வொரு மனித தேகத்திலும் பூரணமாக விளங்குகின்றார். உச்சிக்குங் கீழே, உண்ணாவுக்கு மேலே, புருவமத்திக்கு நேர் உட்பாகத்தில், தலை நடு இடத்தில் ஆண்டவர், *"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணையோடு"* எப்போதும் கருணை விளக்கென பிரகாசிக்கின்றார்.
*"உச்சிக்குக் கீழே உண்ணாவுக்கு மேலே நிதம் வச்ச விளக்கு எரியுதடி வாலைப்பெண்ணே"*
--- சித்தர் பாடல்
அதாவது நமது தலையில் மண்டை ஓட்டின் உள்ளே பெருமுளை, சிறுமூளை முகுளம் என்ற மூன்று மூளைப் பகுதிகள் உள்ளது. பெருமூளைக்கு கீழே, ஓங்கார முகுள மூளைக்கு மேல் ஓர் குழி உள்ளதாம். அந்த குழி *"ப"* கர வடிவத்தில் உள்ளதாம் (Cerebrospinal cavity). இதற்கு மேல் உள்ள வெற்றிடத்தில் தான் ஆன்மப் பிரகாசம் சதா *"நான்-நான்"* என்ற வண்ணமாய் *"அறிவாகாயமாய்"*(சித்து+ ஆகாசம்=சிதாகாசம்) சுடர் விட்டுக்குக் கொண்டிருக்கின்றதாம். இந்த மெய்ஞ்ஞான (சத்திய ஞானசபை) உணர்வுக்கு உள்ளீடாய் இருப்பது எல்லாம் வல்ல *"அருட்பெருஞ்ஜோதி"* கடவுட் பிரகாசம்.
*** இந்த தேகத்தில் *"நான் யார்?"* எனில், "நான் ஆன்மா"; கோடி சூரியப் பிரகாசம் உடையவன் ; இதன் இருப்பிடம் மூக்கு நுனியாகிய புருவமத்தி.
----- வள்ளலார்
** மற்றபடி இந்த உடம்பில் தலைப்பகுதியில் தான் கண், நாக்கு, மூக்கு, செவி ஆகிய நான்கு இந்திரியங்களும் பொருந்தியுள்ளன. இந்த நாற்பொறிக்கும் மற்ற தேக (ஸ்பரிசம்) முழுவதற்குமே ஆதாரமாய் *"சிரநடு மெய்யொளி"* திகழ்கின்றது. எனவே அறிவு அனுபவங்கட்கு எல்லாம் இடமாகிய சிரப்பகுதியே சிறப்பும் உயர்வும் உடையதாகும்.
கண்ணாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளி காட்டிப்
பெண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே
--- திருமந்திரம்
எனவேதான் அருட்பெருந்தலைவர் ஒளிர்கின்ற தலை நடுவைச் சுற்றி,
1) ஒளி அறிவு (புற இடம்-கண்)
2) ஒலி அறிவு (புற இடம்-செவி)
3)சுவை அறிவு (புற இடம் -நாக்கு)
4)நாற்ற அறிவு (புற இடம் -மூக்கு)
5) ஸ்பரிச அறிவு (புற இடம் -தோல்)
என்ற ஐந்து புலன் அறிவுகள் விளங்குகின்றது.
இது ஆன்ம வெளியின் புறப்புற உணர்வுகள் ஆகும். புற வெளியில் ஆறாவதாக மன உணர்வும், அகப்புறத்தில் ஜீவ உணர்வும், அகம் ஆன்ம உணர்வு ஆகவும் உள்ளதாம்.
(குறிப்பு;--- நடுப்புள்ளி சிரநடு விளங்கும் ஆன்ம உணர்வையும், அதைச் சுற்றியுள்ள வட்டங்கள் புற உணர்வு அனுபவங்களையும் குறிக்கின்றது)
11) *"இனி தியானத்தை தொடங்கலாம்:-"*
முதல் பயிற்சி:--
முன்னிலையில் அகல் விளக்கு தீபத்தை ஏற்றி வைக்கவும். மன ஓர்மையோடு அந்த தீபச்சுடரில் எல்லாம் வல்ல கடவுள் விளங்குவதாக பாவிக்க வேண்டும். அத் தீபத்தையே உற்று நோக்க வேண்டும்.
*"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"*
-- என்ற மகா மந்திரத்தை சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும். பார்வையும் எண்ணமும் அகலாது, வேறு எதையும் சிந்திக்காது இருக்க வேண்டும். பார்வையும் எண்ணமும் விலகினால் உடனே திருத்தி சரி செய்து கொள்ள வேண்டும்.
வடக்கு நோக்கி தியானம் செய்யும்போது நம் மனோ கரண ஜீவாத்ம சக்தியை துருவ நட்சத்திரம் நேரே ஈர்க்கின்றது. வேறு திசைகளில் கொஞ்சமும் அசையவிடாமல் மனதை ஓர்மையில் நிலைக்கும் படி செய்கிறது. இப்படி சில காலம் பழகி வந்தால் அனுபவம் உண்டாகும்.
12) *"அகப்பயிற்சி:"*-
புறத்தீபம் எப்போதும் தேவையில்லை. முதற்பயிற்சி ஓரளவு கூடினாலே போதும். *"அகநிலைக்கு வந்து விட வேண்டும்."*
சிரநடு சிற்றம்பலத்தில் *"கடவுள் ஆன்ம அணு"* சதா ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. ( *"நான்"* என்ற உணர்வு கொண்டு இப்பக்கம் மனிதனாக, *"தான்"* என்ற உட்பக்கம் கடவுளாக, ஒரு நானும் தானும் ஆன உபய பக்கமும் சேர்ந்த இரண்டற்ற ஒன்றாக -அருட் ஜோதியாக உள்ளது, சச்சிதானந்தமாகிய கடவுள் ஆன்ம அணு).
*"அது நாம்"* என்ற அனுபவம் வருவது எளிதன்று.
அதற்கு தயா ஒழுக்கத்தோடு சத்விசார வசத்தராய் இருந்து முயற்சிக்க வேண்டும். அருட்ஜோதிக் கடவுள் அணு திகழும் அம்பலத்தின் முன் வாயிலாம் புருவநடு இடம் உள்ளது. இங்கு தான் உயிர் உணர்வும் மன உணர்வும் ஒன்றி நிற்க கூடியதாயும் இருக்கின்றது. ஆகையால் இந்த இடத்தில் மனதை நிறுத்திப் பழக வேண்டும்.
13) அதற்கு உபாயமாக ஒரு குறிப்பை வழங்கியுள்ளார் நம் வள்ளலார்.
யாதெனில் ;----
புருவ மத்தியில் ஓங்கார பீடம் ஒன்று இருப்பதாகவும், அதன் மீது ஒரு சிறிய வெண்தாமரை மலர்ந்து திகழ்வதாகவும், அம் மலர் நடுப்பொகுட்டின் மேல் ஒளிச்சுடர் ஒன்று மிளிர்கின்றதாகவும், அவ்வொளிக்குள் அருட்பெருஞ்ஜோதி பதி விளங்குவதாகவும் பாதிக்க வேண்டும் ஆம். இங்கே இப்படி பாவிக்கப்படும் ஒளிச்சுடர், வெற்றுக் கற்பனையோ பொய்யான பாவணையோ அல்ல. தலை நடுவுள் வளர் கடவுட் ஜோதியின் பிரதிபலிப்பே புருவ மத்திய கண்ணாடியில் தோற்றுவதாம். ஆகையால், இங்கே மனம் நின்று மணி பெற்றுத் திகழ்வது ஆன்ம அனுபவத்திற்கு உரிய முதற்படியாய் இருக்கின்றது.
14)எல்லாம் வல்ல கடவுள் சத்தியமாக, உண்மையாக இந்த புருவநடு திகழும் வெண்தாமரை மலர் மீது விளங்குகின்ற தீபச்சுடரிலே, எப்போதும் ஒளிர்வதாக தொடர்ந்து சதா அந்த சிந்தனையிலே இருக்க வேண்டும்.
*"மறப்பற்ற உள்ளத்தில் மறைப்பற்று வாழும் வள்ளல் மலர் அடித் துணையே நாம் பெறுதல் வேண்டும்"*
--- தயவுப்பாக்கள், சுவாமி சரணானந்தா
15) புறத்தில் நேருக்கு நேராக எப்படி ஒருவரைப் பார்த்து பேசி பழகுகின்றோமோ, அதைவிட கோடி பங்கு அதிக நெருக்கமாக, உண்மையாக, எப்போதும் உடனாக, மறுத்தாலும் மறந்தாலும் ஒருபோதும் பிரியாதவனாக, *"நம்மில் நாமாக"* இறைவன் உள்ளே உள்ளார்.
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
*"மன்றாடும் மலர் பாதம் ஒருகாலும் மறவாமை"*
குன்றாத குணமுடையார் தொண்டராம் குணமிக்கார்.
----பத்தராய் பணிவார்
***இறவாமை வேண்டின் திருவடி மறவாமை வேண்டும்.
*** மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்
*** தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
----- திருக்குறள்
*** மனதை எப்போதும் சிற்சபையின் கண்ணே (புருவமத்திக்கு உட்புறம்) செலுத்த வேண்டும். எந்த காரியமும் செய்யினும், எந்த விவகாரம் செய்யினும் சிவ சிந்தனையோடு இருக்க வேண்டும்.
----- திருவருட்பா
தொடரும்.......