14/01/2026
பிள்ளை பசி பசி என்கின்றான், அடிக்கடி சாப்பிட்டும் போதவில்லை என்கின்றான் என்று நீங்கள் கவலைப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா?.. அதே போலவே, கொழும்பில் இருந்தும் ஒரு தாய் தனது மகன் குறித்து பின்வருமாறு கேட்டிருந்தார்.
"எனது மகனுக்கு 12 வயது. எப்போதும் நொறுக்குத் தீனி சாப்பிடுகின்றான், இருந்தும் எந்நேரமும் பசிக்கின்றது என்று கூறுகிறான். இரவில் 3 தடவை சாப்பிடுகிறான், பகலிலும் அப்படித்தான். அவன் இப்போது உடல் பருமன் கூடியவனாக இருக்கிறான். மரக்கறியைத் தொடுவதே இல்லை, அவனுக்கு எப்போதும் மாமிச உணவுகளே தேவைப்படுகின்றது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
இதை ஒரு பெற்றோராய் இருந்து வாசித்துக் கொண்டிருப்பீர்களானால், இங்கு அந்தத் தாய் கூறிய அதே விடயத்தை நீங்களும் உங்கள் பிள்ளைகளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவதானித்திருப்பீர்கள் அல்லவா?. சில நாட்களில் என்னேரமும் சாப்பாடு கேட்டுக் கொண்டிருப்பார்கள், சில நாட்களில் சாப்பாட்டில் அக்கறை காட்டவே மாட்டார்கள், நாம் சாப்பிடச் சொல்லி பின்னால் அலைய வேண்டி இருந்திருக்கும். எனவே இந்தப் பிரச்சினை அனைவருக்கும் பொதுவானது, எனவே முதலில் நாம் பதட்டப்படுவதை நிறுத்திக் கொள்வோம்.
பிள்ளைகள் வளர்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த வளர்ச்சி வித்தியாசமாக இருக்கும். அதிகம் வளரும் போது அதிக பசியெடுக்கும், அவ்வளவு தான். எனவே பசி அதிகமாக இருக்கிறது என்று கூறினால் அது தப்பு இல்லை, அது அவனது வளர்ச்சிக்கு அதிக உணவு தேவைப்படுகின்றது என்பதே பொருள். ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது
சாப்பிட்டும் பசி மீண்டும், மீண்டும் அடிக்கடி வருகின்றது அத்தோடு பிள்ளையின் எடையும் அதிகரிக்கின்றது என்றால் அதற்கு பல காரணங்கள் இருப்பினும் அவற்றில் முக்கியமானது உடல் தனக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் சரியான விகிதத்தில் அவன் சாப்பிடும் உணவின் மூலம் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே ஆகும். அதாவது அவன் சாப்பிடும் போது வயிறு நிறம்புகின்றது, உடலின் தேவை நிறம்பவில்லை, உடல் தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள அடிக்கடி பசியை ஏற்படுத்துகின்றது. இங்கு அடிக்கடி பசிக்க அவன் அதிக வளர்கிறான் என்று பொருள் இல்லை, அவன் சமநிலையான உணவை உட்கொள்ளவில்லை என்பதே பொருள்.
காரணம் தெரிந்து கொண்டோம் இல்லையா? இனி தீர்வைப் பற்றிக் கதைப்போம். பிள்ளைகளின் உணவுப் பழக்கத்தை மாற்றும் விடயத்தில் மிக எளிதான விடயம் புரத உணவுகளை அவர்களது உணவுத் தட்டில் போதுமான அளவு சேர்ப்பது ஆகும். பொதுவாக பிள்ளைகள் இவற்றை உண்பதில் பிடிவாதம் காட்டுவதில்லை. எனவே கோழி, இறைச்சி, மீன், முட்டை, பருப்பு, பால் மற்றும் பால் உணவுகள் போன்ற புரதங்களை அவர்களின் உணவு வேளைகளில் போதுமான அளவு சேர்ப்பது நன்கு சாப்பிட்ட திருப்தியைத் தருவதோடு, வயிறு முழுமையான ஒரு உணர்வையும் தருகின்றது. அது மீண்டும் மீண்டும் பசிக்கும் உணர்வைக் குறைக்கின்றது.
துரித உணவுகள், பொரித்த உணவுகள், பக்கட்டில்/டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள் போன்றன சிறிது நேரம் வயிற்றை நிறப்பினாலும் அவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பசியெடுக்க ஆரம்பிக்கின்றது. ஏனெனில் இவை பொதுவாக ஆரோக்கியம் குறைந்த, சமநிலைப் போசாக்கு அற்ற உணவுகளாகும். இவற்றை நாளாந்தம் கொடுப்பதை தவிர்த்து பார்ட்டி உணவுகளாக, அடிக்கடி இல்லாமல் அவ்வப்போது கொடுக்கும் உணவுகளாக மாற்றிக் கொள்வதே அனைத்திற்கும் சிறந்தது ஆகும்.
மரக்கறியை உண்ண வைப்பது - இதுதான் பெற்றோர்களின் மிகப் பெரிய சவாலாகும். பிள்ளைகளை மரக்கறியைச் சாப்பிடச் சொல்லித் திணிப்பது அவர்களின் எதிர்ப்பில் தான் முடிவடையும். எனவே அவற்றை அவர்கள் விரும்பிய வகையில் படிப்படியாக கொடுப்பதே சிறந்த தீர்வாக அமையும். சோறை பிறைட் ரைசாகவும், பிட்டு / இடியப்பம் ஆகியவற்றை கொத்தாகவும் கொடுக்கும் போது மரக்கறியை சேர்த்துக் கொள்ள முடியும். தோசையை மரக்கறி, மச்சம் சேர்ந்த கீமாவுடன் சுற்றியும், ஓம்லட்டில் மரக்கறி சேர்த்தும் வழங்கலாம் அல்லவா?. இன்னும் என்னென்ன வழிகள் உள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதன் போது எண்ணெயின் அளவை மட்டுப்படுத்துவது மிக முக்கியம். எனவே மரக்கறியை மேலே சொன்னவாறு ருசியாகக் கொடுத்து பின்பு படிப்படியாக அதிகப்படுத்துங்கள்.
பிள்ளைகளின் இரவு நேரப்பசி பெற்றோருக்கு அதிக தலைவலியைத் தரும் ஒரு விடயமாகும். பெரும்பாலும் இது பசியல்ல, அது பழக்கம் அல்லது அலுப்பில் வருவது இல்லாவிட்டால் இரவுணவு சமநிலை இல்லாமல் இருப்பதால் வருவது. இரவுணவுகளை மிகவாக அளவோடு பேணுவதே சிறப்பு.
முக்கியமான விடயம், எடையைக் குறைப்பதற்காக பிள்ளைகளுக்கு கடினமான டயட்களை திணிக்காதீர்கள். இதை ஒரு போதும் செய்யாதீர்கள். எமது அவசரத்திற்கு எடையைக் குறைக்க முடியாது. பிள்ளைகளுக்கு எடையைக் குறைக்கும் முயற்சிகள் அவர்களது ஆரோக்கியமான வளர்ச்சியையும், போதுமான சக்தியையும் வழங்குவதோடு நீடித்து நிற்கக் கூடிய நல்ல உணவுப் பழக்கவழக்கங்களையும் அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்
ஒவ்வொரு பிள்ளைகளும் தனித்துவமானவர்கள். அவர்களது வயது, உறுசுறுப்புத் தன்மை, பாடசாலை வழமைகள், குடும்ப உணவு முறைகள் என்பன ஒவ்வொருவருக்கும் வித்தியாசம். எனவே அவரவர் சூழ்நிலைக்கேற்ப தனிப்பட்ட ஆலோசனைகளே சிறப்பான வெற்றியைத் தருவதோடு அவர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தி அவர்களில் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகின்றது.
இறுதியாக - பெற்றோர்களே பிள்ளைகளைத் திருத்த முன்பு நீங்கள் திருந்திக் கொள்ளுங்கள். நீங்கள் மாறாத வரை அவர்கள் மாறமாட்டார்கள், இதுதான் நிதர்சனமான உண்மை
உங்கள் அனுபவங்கள் என்ன? நீங்கள் என்ன நடைமுறையைப் பின்பற்றினீர்கள்? எதில் வெற்றி கண்டீர்கள்? என்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை Comment இல் குறிப்பிடுங்கள்.
அனைத்து பெற்றோரையும் சென்றடைய Share செய்ய மறக்காதீர்கள
M.S. Shamil Fowzath
Clinical Nutritionist