Bright Future Foundation

  • Home
  • Bright Future Foundation

Bright Future Foundation This page will help you to know something about your health and fitness. Prevention is better than cure!

01/08/2022

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், தாமதியாது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டே சிகிச்சை பெற வேண்டும்.

இந்த வருடத்தில் இரண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் டெங்கு நோய்க்காளாகி மரணித்துள்ளதாக அறிய முடிகிறது.

வீட்டில் சாதகமில்லை என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி, தனியார் வைத்திய சிகிச்சையை நாடிச்சென்று, மீளமுடியாத துயரத்தை கணவன், பிள்ளைகளுக்கும் கொடுத்துவிடாதீர்கள்.

Any pregnant mother who gets fever, must be admitted to hospital for medical care without delay.

It is learned that there were two deaths of pregnant mothers due to Dengue this year.

Please don't give irreplaceable sorrow to the family by seeking private medical care due to just inconveniences at home.

-SL

30/07/2022

நுளம்புகள் வாழ வழிசமைத்தால், நம்மை வாழவிடாமல் பண்ணிவிடும். இன்றே எமது வாழ்விடங்களை நீர் தேங்கக்கூடிய இடங்களோ அல்லது வேறு ஏதும் எதுக்களோ இல்லாமல் செய்துவிடுவோம்!

26/05/2021

#கொரோனா_தொற்றாளர்களுடன்_தொடர்புற்றவர்களின்_தனிமைப்படுத்தல்...

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது இதுவரையான நடைமுறை என்பது எமக்குத் தெரியும்.

இவர்களோடு தொடர்புற்றவர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களை ஆங்கிலத்தில் primary/first contacts என்று அழைப்பார்கள்.

⁉ இவர்களை அடையாளம் காண்பது எப்படி?
👉
1. தொற்றாளர்களோடு ஒரே வீட்டில் அல்லது ஒரே அறையில் வசிக்கும் அனைவரும்.
2. தொற்றாளரோடு 24 மணித்தியாலங்களுக்குள் 15 நிமிடங்களுக்கு மேல் 6 அடிகள் சுற்றுவட்டத்துக்குள் இருந்தவர்கள் (இந்த 15 நிமிடங்கள் ஒரே தடவையிலும் இருக்கலாம் அல்லது பல தடவைகளிலான 15 நிமிடங்களாகவும் இருக்கலாம்). 6 அடிகள் சுற்றுவட்டம் என்பது ஒரு வாகனமாகவும் இருக்கலாம், ஒரு மூடிய இடமாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பொது இடமாகவும் இருக்கலாம்.
3. வேலைத்தளங்களில் ஒன்றாக வேலை செய்கின்றவர்கள்.
4. சந்தித்துக்கொண்டவர்கள்.

2 வது, 3 வது, 4 வது வகையான தொடர்பாளர்கள் பற்றிப் பார்க்கும் போது, தொற்றாளர்கள் நோய் அறிகுறிகள் உள்ளவர்களாயின் அவர்களுக்கு நோய் அறிகுறி தென்படுவதற்கு முன்னுள்ள இரண்டு நாட்களுடன், சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் காலப்பகுதியிலும், அறிகுறிகள் இல்லாதவர்களாயின் அடையாளம் காண்பதற்கு முன்னுள்ள 7- 10 நாட்களுக்குள்ளும் தொடர்புற்றவர்களாகும்.

⁉ தொடர்புற்றவர்களை எத்தனை நாட்களுக்கு தனிமைப்படுத்துவது?
👉
பதினான்கு நாட்களுக்கு. இந்த பதினான்கு நாட்கள் என்பது தொற்றாளரை கடைசியாக தொடர்புற்ற நாளில் இருந்து கணக்கிடப்படும்.

இதன் நோயரும்பு காலம் பதினான்கு நாட்களாகும். அதாவது நோய் தொற்றியதில் இருந்து நோய் அறிகுறி தென்பட எடுக்கும் காலமாகும். அதனாலேயே பதினான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

⁉ தனிமைப்படுத்தலை முடிவுறுத்துவது எப்படி?
👉
பதினான்கு நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படாவிட்டாலும், நோய் தொற்றியிருக்காது என்று அர்த்தமில்லை. ஏனெனில், கொரோனா தொற்றிய பலருக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆனாலும், அவர்கள் நோயைப் பரப்பக்கூடும்.
எனவே, தனிமைப்படுத்தலின் 10 அல்லது 11 வது நாளுக்குப் பிறகு அவர்களுக்கு பீ சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்றில்லை என்ற முடிவு கிடைக்கப்பெறின், பதினான்கு நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

⁉ ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக தனிமைப்படுத்தப்பட்டிருந்து, விடுவிப்பதற்கு முன்பதாக செய்யப்படும் பரிசோதனையில் அவர்களில் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டால், அவர்களோடு இருக்கும் ஏனையவர்களின் நிலை என்ன?
👉
அத்தகைய சந்தர்ப்பத்தில் எஞ்சியிருக்கும் ஏனையவர்கள் மீண்டும் பதினான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இப்போதும், புதிய தொற்றாளர்களை சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்படும் நாளில் இருந்து தான் கணக்கெடுக்கப்படும். (பரிசோதனை செய்த நாளில் இருந்து அல்ல). அதாவது கடைசியாக தொடர்புற்ற நாள் தான் கவனிக்கப்படும்.

@ D N A

இம்மாதத்தின் எஞ்சிய நாட்கள் மிகவும் முக்கியமானவை!~~~~~~~~~~~~~~~~~~~~~~~வெளிநாட்டிலிருந்து வருகை தருவது முற்றாக நிறுத்தப...
19/03/2020

இம்மாதத்தின் எஞ்சிய நாட்கள் மிகவும் முக்கியமானவை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெளிநாட்டிலிருந்து வருகை தருவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,

ஏற்கெனவே இங்கு வருகை தந்து இன்னும் 14 நாட்கள் கடந்து போகாதவர்கள் மூலமாகத் தான் COVID-19 இங்கு பரவக்கூடிய வாய்ப்புள்ளது.

ஆதலினால், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவது மிகவும் அவசியமாகும்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு இம்மாதம் முடியும் போது, உள்ளூர் நோயாளர்கள் ஒருவரும் கண்டுபிடிக்கப்படாவிட்டால், நாம் இந்நோயிலிருந்து இன்ஷாஅல்லாஹ், பாதுகாப்பான நிலையை அடைந்துவிட்டதாக ஊகிக்கலாம்.

அதன் பிறகு, pandemic நிலமையிலிருந்து இந்நோய் விடுபடும் வரை, நாட்டுக்குள் வருகின்ற அனைவரும் விமான நிலையத்தில் இருந்தே வேறாக்கப்பட்டு கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் தான் எமது நாடு தொடர்ந்தும் இந்நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.

எனவே, இருக்கும் எஞ்சிய நாட்களுக்கும் சுய தனிமைப்படுத்தலுக்கு இயன்றவரை ஒத்துழைப்பு வழங்குவோம்!
வழங்க வைப்போம்!

அத்துடன், இவ்வாறு வருகை தந்தவர்களில் தனிமைப்படுத்தப்படாத யாராவது 14 நாட்களுக்குள் இந்நோயினால் பதிக்கப்பட்டதாக இறுதியாக அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களிலும் வேறு உள்ளூர் நோயாளர்கள் அடையாளம் காணப்படாதிருக்கவும் வேண்டும்.

@ D N A

COVID-19 யைப் பொறுத்தளவில்  Face Mask யார் அணிய வேண்டும்?COVID -19 நோயை உண்டாக்கும் 2019 Novel Corona வைரசானது, அந்த நோய...
18/03/2020

COVID-19 யைப் பொறுத்தளவில் Face Mask யார் அணிய வேண்டும்?

COVID -19 நோயை உண்டாக்கும் 2019 Novel Corona வைரசானது, அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் தும்மும் போது அல்லது இருமும் போது விசிறப்படும் சளித்துணிக்கைகள் மூலமாகவே இன்னொருவருக்கு பரவும். அவை காற்றின் மூலமாகப் பரவுவதில்லை. இந்த வைரசு கிருமிகளைக் கொண்ட சளித்துணிக்கைகளை ஒருவர் தனது கைகளினால் தொட்டுவிட்டு, அதே கைகளினால் தனது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடும் போதே அவரது உடலுக்குள் கிருமிகள் செல்லுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த கொரோனா வைரசு கிருமிகள் எவ்வாறு பரவும் என்ற அடிப்படையை விளங்கிக்கொண்டால், அதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை சிறப்பாக மேற்கொள்ளலாம்.

இந்த வைரசு கிருமிகள் காற்றினால் பரவமாட்டாது என்பதையும், அவற்றைக்கொண்ட சளித்துணிக்கைகளை தொட்டு தமது மூக்கு, வாய், கண்களைத் தொடுவதன் மூலமாகவே பரவும் என்பதையும் சரியாக விளங்கிக்கொண்டால், Face Mask அணியவேண்டுமா அல்லது யார், எந்த சந்தர்ப்பத்தில் அணியவேண்டும் என்பதனையும் அறிந்துகொள்ளலாம்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு தும்மல், இருமல் இருக்குமாயின் அவர் Face Mask பாவிக்கலாம். அது கூட அவர் தனது இடத்தில் இருந்து வெளியே சென்றாகவேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாத்திரம் பயன்படுத்தலாம்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் வருகை தந்த முதல் 14 நாட்களுக்குள், நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் வெளியே செல்லவேண்டிய தேவை ஏற்படின், அவர்களும் Face Mask அணியலாம்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்துக்குரியவர்கள் மற்றும், உறுதிப்படுத்தப்பட்டவர்களோடு நெருக்கமாக வேண்டிய சுகாதார சேவை வழங்குனர்கள் போன்றவர்கள் அணியலாம்.

அவ்வாறில்லாமல் சந்தேகத்தின் அடிப்படையில், எல்லோருமே Face Mask பயன்படுத்த ஆரம்பித்தால் ஒரு நாளைக்கு எத்தனை இலட்சம் Face Mask தேவைப்படும்? இதனை எமது நாட்டினால் சமாளிக்க இயலுமா?

மாறாக, அந்த நோய் வராமல் தடுக்க பின்வரும் இலகுவான வழிமுறைகளைக் கையாளலாம்.

1) முடிந்த வரை கைகளை அடிக்கடி சவர்க்காரம் அல்லது அதற்கான தயாரிப்புகளைக் கொண்டு கழுவ வேண்டும்.
2) கழுவாத கைகளினால் தமது மூக்கு, வாய், கண்களை தொடுவதனைத் தவிர்க்க வேண்டும்.
3) தேவையில்லாமல் ஒன்றுகூடுவதனைத் தவிர்க்க வேண்டும்.
4) தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
5) வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளுக்கு செல்வதனையோ அல்லது அவர்களை அவசியமில்லாமல் சந்திப்பதனையோ தவிர்க்க வேண்டும்.
6) ATM machine போன்ற பொது பயன்பாட்டு இடங்களில் கை வைத்தால் அல்லது பணம் போன்றவற்றை கையாண்டால் உடனடியாக கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.
7) சிறுவர்களை அவசியமில்லாமல் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதனைத் தவிர்க்க வேண்டும்.
8) அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், மற்றும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் எல்லாம் கைகளைக் கழுவுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், அது திருப்தியாக நடைபெறுகிறதா என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
9) பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இடைவழியில் ஏறுபவர்கள் கைகளைச் சுத்தம் செய்ய Gel அல்லது Spray பண்ணக்கூடிய பதார்த்தங்கள் பஸ்களில் இருக்க வேண்டும்.
10) காற்றோட்டமில்லாதவாறு பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இருக்கக்கூடாது.
11) ஏனையோருடன் நேரடியாக உரையாடும் தேவை ஏற்பட்டால், குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணவும்.
12) தும்மும் போது அல்லது இருமும் போது கைக்குட்டை அல்லது திசு பேப்பர் அல்லது இவை எதுவும் கிடைக்காதவிடத்து தமது மடித்த முழங்கையின் உட்பாகத்தினால் மூக்கையும், வாயையும் மறைத்துக்கொள்ளவும். பயன்படுத்திய கைக்குட்டையை உரிய முறையில் கழுவுவதுடன், திசுப் பேப்பரை உரிய முறையில் அகற்றிவிடவும்.

@ D N A

 #இறுதிவரை_வாசித்துவிட்டு_நீங்களும்_பகிரலாம்👍👍👍கொரோனா (COVID-19) வர வேணாமா?இவ்வாறு நடந்துகொள்ளுங்கள்!👇👇👇2019 ஆம் ஆண்டின்...
12/03/2020

#இறுதிவரை_வாசித்துவிட்டு_நீங்களும்_பகிரலாம்👍👍👍

கொரோனா (COVID-19) வர வேணாமா?
இவ்வாறு நடந்துகொள்ளுங்கள்!👇👇👇

2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவின் வூஹான் நகரத்தில் ஆரம்பித்த கொரோனா நோய்த்தொற்று இன்று உலகம் பூராகவும் பரவிக்கொண்டிருக்கின்றது. பல நாடுகள் தமது நாட்டுக்குள் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த குறித்த சில நாடுகளுக்கடையில் போக்குவரத்தையே தடைசெய்துள்ளார்கள். இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது என்று தெரியவில்லை. அதாவது 2019-nCoV வைரசுகள் மனிதர்களிடையே இல்லை என்ற நிலை தோன்றும் வரை இந்நோய் பரவலாம்.

ஆக, எத்தனை நாடுகள் எவவ்ளவு காலத்துக்கு குறித்த தடையை தொடரப்போகிறதோ அவனே அறிவான்.

இருந்த போதிலும், சில எச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு தனிநபர் தொடக்கம் சகல அரசுகளும் கடைப்பிடிக்கும் பட்சத்திலேயே இதன் அச்சத்தை விரைந்து இல்லாமல் செய்யலாம்.

இந்நோயானது மனிதர்களிடையே தற்போது பாதிக்கப்பட்ட ஒருவரினூடாகவே இன்னொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்புள்ளது. அதுவும், நோய்த்தொற்றுக்குள்ளானவர் தும்மும் போது அல்லது இருமும் போது விசிறப்படும் உமிழ்நீர் அல்லது சளித்துணிக்கைகள் மூலமாகவே இந்த வைரசுகள் பரவும். மேலும், உடலுக்கு வெளியே சூழலில் நீண்ட காலத்திற்கு இந்த வைரசுகள் உயிரோட்டமுள்ளதாக இருக்காது. அத்துடன், இந்நோய்த் தொற்றுக்காளானவர் அதன் நோயரும்பு காலமான 14 நாட்களுக்கே கிருமிகளைப் பரப்பக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பார்.

இந்த அடிப்படையான தகவல்களை சரியாக உள்வாங்கிக் கொண்டால், இந்நோய் பரவுவதனை விரைவாகத் தடுத்துவிடலாம்.

குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றவர்கள் அவ்வாறு நாட்டுக்குள் வந்த தினத்திலிருந்து 14 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்தக் காலப் பகுதிக்குள் அவ்வாறானவர்களோடு நெருங்கிப் பழகியவர்களும் கடைசியாகப் பழகிய நாளிலிருந்து 14 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்.

👉 அவ்வாறானவர்கள் இயன்றவரை 14 நாட்கள் வீடுகளிலேயே தங்கியிருத்தல் வேண்டும்.
👉 வசதி வாய்ப்புகள் இருந்தால் தனியறைகளில் இருக்க வேண்டும்.
👉 இயன்றவரை தேவையற்ற பயணங்களையும், மக்கள் ஒன்றுகூடும் இடங்களையும் தவிர்க்க வேண்டும்.
👉 இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை, திசு பேப்பர்களைப் பயன்படுத்த வேண்டும். அவை எதுவும் கிடைக்காத பட்சத்தில், தமது முழங்கைகளை மடித்து முழங்கையின் உட்பக்கத்தினால் மூக்கையும், வாயையும் மறைக்க வேண்டும்.
👉 பாவித்த திசு பேப்பரை உரிய முறையில் அகற்றுவதுடன், கைக்குட்டையை சவர்க்காரம் அல்லது அதற்குரிய கலவை கொண்டு கழுவ வேண்டும்.
👉 முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், காய்ச்சல் அல்லது சுவாச நோய்க்குரிய ஏதாவது அறிகுறிகள் ஆரம்பிக்குமாயின், முகக் கவசம் அணிவது அவசியமாகும்.
👉 அவ்வாறு ஏதாவது அறிகுறிகள் தோன்றினால், அது பற்றி உடனடியாக தமது பகுதிக்குரிய பொது சுகாதார பரிசோதகருக்கு அல்லது சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்துவதுடன் தகுந்த வைத்திய ஆலோசனையை நாட வேண்டும்.
👉 அவ்வாறானவர்கள் உட்பட சகலரும் மேலே குறிப்பிடப்பட்டவைகளோடு, கைகளைக் கழுவும் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சவர்க்காரம் அல்லது வேறு தகுந்த கலவைகளைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். ஒரு தடவையில் குறைந்தது 20 செக்கன்களுக்கு கைகளைத் தேய்த்துக் கழுவ வேண்டும்.
👉 இந்தக் காலப்பகுதியில், தேவைகள் நிமித்தம் வெளியில் சென்று வருகின்ற எல்லோரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கைகளை மேலே சொல்லப்பட்டவாறு நன்கு கழுவிக்கொண்டே வீடுகளுக்குள் நுழைய வேண்டும்.

நாமும் கவனமாக இருப்பதுடன் ஏனையோரையும் கவனமாக இருக்கச் செய்வோம்.🤝🤝🤝

Dr. N. Ariff
Regional Epidemiologist
Office of RDHS
Kalmunai
12. 03. 2020

சார்ஸோ, மேர்ஸோ, கொரோனாவோ, இன்னும் எதுவாகினும், வைரஸ் கிருமித் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பின்வரும் விடய...
02/02/2020

சார்ஸோ, மேர்ஸோ, கொரோனாவோ, இன்னும் எதுவாகினும், வைரஸ் கிருமித் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பின்வரும் விடயங்களைக் கையாளவேண்டும்.

01) அடிக்கடி சவர்க்காரம் அல்லது பொருத்தமான ஒன்றைப் பயன்படுத்தி கைகளை நீரினால் நன்றாக கழுவ வேண்டும்.

02) இவ்வாறான நோய்கள் பரவும் காலங்களில் தேவையின்றி மக்கள் அதிகமாக கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

03) நோய் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவரிடம் இருந்து அல்லது தொடர்ந்து தும்மும், இருமுகின்றவர்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீட்டர் தூர இடைவெளியைப் பேண வேண்டும்.

04) தும்மும் போதும் இருமும் போதும் பொதுவாக கைக்குட்டை, திசு போன்றவற்றினால் வாய் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். இவை கிடைக்காத போது, தனது முழங்கையை மடித்து அதன் உட்புறத்தை பயன்படுத்தலாம்.

05) தேவையில்லாமல் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

06) தனக்கு தெரிந்த இந்த விடயங்களை ஏனையோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

@ D N A

உயிரின் பெறுமதி வெறும் ஐந்து நிமிடமே!-------------------------------------------------------------------கடந்த சில வாரங்க...
13/12/2019

உயிரின் பெறுமதி வெறும் ஐந்து நிமிடமே!
-------------------------------------------------------------------

கடந்த சில வாரங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாடு பூராகவும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக எண்ணிக்கையானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றமும் இந்நிலமைக்கு காரணமாகிறது என்பதோடு, பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக தேவையாகின்றது.

டெங்கு நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எடுத்துச் செல்லும் ஏடிஸ் வகை நுளம்புகள், நீர் தேங்கி நிற்கும் இடங்களிலேயே பெருகுகின்றது. இவ்வாறான இடங்களில் கிட்டத்தட்ட 95 சதவீதமான இடங்கள் மனிதர்களின் தவறான செயற்பாட்டினாலேயே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறான இடங்களில், அகற்றக்கூடிய இடங்களை அகற்றுவதும், அகற்ற முடியாத இடங்களில் நீர் தேங்கி நிற்காதவாறு மாற்றுவழிகளைக் கையாளுவதுமே நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

ஏடிஸ் வகையான இந்த நுளம்புகள் ஈரலிப்பான மேற்பரப்புகளில் முட்டைகளை இடும். இம்முட்டைகள் ஓட்டும் தன்மையுடையவை. ஒரு வருடமானாலும் இம்முட்டைகள் உலர்ந்த நிலையிலும் அழியாமல் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். 4 தொடக்கம் 5 வாரங்கள் உயிர்வாழக்கூடிய இந்நுளம்புகள் தமது வாழ்நாளில் சுமார் 4 தடவைகள் முட்டை இடும். ஒவ்வொரு தடவையும் 200 தொடக்கம் 300 முட்டைகளை இடும். இம்முட்டைகளை இடும் நுளம்புகள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் குத்தியிருந்தால், அதன் பிறகு அது இடும் அத்தனை முட்டைகளினுள்ளும் டெங்கு வைரஸ் கிருமிகள் இருக்கும். பின்னர், இவற்றிலிருந்து வரும் அத்தனை நுளம்புகளினுள்ளும் டெங்கு வைரஸ் கிருமிகள் இருக்கும்.

டெங்கு நோயைக் குணப்படுத்துவதற்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனின், இந்நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற கேள்வி எழுகின்றது. டெங்கு வைரஸ் கிருமிகளைப் பரப்புகின்ற நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமாகவே இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நுளம்புகளைக் கட்டுப்படுத்துவது எனும் போது, பறந்து திரியும் நுளம்புகளை அழிப்பது, நுளம்புக் குடம்பிகளை அழிப்பது, நுளம்புகள் முட்டையிடாமல் தடுப்பது என்பன அடங்கும். இவற்றில் நுளம்புகள் முட்டையிடாமல் தடுப்பது தான் சிறப்பானதும் ஏற்புடையதுமாகும். அதற்கு, தேங்கி நிற்கும் நீரை அகற்றுவதும், நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களை அகற்றுவதும், நீர் தேங்கி நிற்காமல் மாற்றுவழிகளுமே தேவையாகிறது.

வீடுகளாகட்டும், அரச அலுவலகங்களாகட்டும், மத ஸ்தலங்களாகட்டும், பாடசாலைகளாகட்டும், தனியார் கல்வி நிலையங்களாகட்டும், வெற்று வளவுகளாகட்டும், மூடிக்கிடக்கும் கட்டடங்களாகட்டும் எதுவானாலும் அவை அத்தனையும் நுளம்புகள் அற்ற இடங்களாக பேணப்பட வேண்டும்.

அதற்காக பின்வரும் விடயங்களில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

👉 பாவித்துவிட்டு அன்றாடம் வீசுகின்ற நீர் தங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் கொள்கலன்களை கண்டபடி வெளியில் வீசாதிருத்தல்.

👉 கிணறுகள், சீமெந்து தாங்கிகள் மற்றும் நீர் சேகரித்து வைக்கும் கொள்கலன்கள் என்பன உரிய விதத்தில் மூடப்பட வேண்டும் அல்லது வலைகளினால் மூடிவைக்கப்பட வேண்டும்.

👉 கிணறு, நீர்த்தடாகம் மற்றும் தாங்கிகளில் நுளம்புக் குடம்பிகளை உண்ணும் மீன்களை வளர்க்க வேண்டும்.

👉 குழாய்க்கிணற்றின் கழுத்துப் பகுதியில் நீர் தேங்கி நுளம்புகள் பெருகாதவாறு அவதானமாக இருக்க வேண்டும்.

👉 நீர் சேகரிக்கும் தாங்கிகள், மலர்ச்சாடிகள் மற்றும் பறவைகளுக்கு நீர் வைக்கும் பாத்திரங்கள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் வாயுசீராக்கியில் நீர் சேகரிக்கும் தட்டுக்கள் போன்றனவற்றை சரியான கால இடைவெளியில் தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்துதல்.

👉 பாவிக்க முடியாத அல்லது பாவனையற்ற மலசலகூட கொமட் மற்றும் சிஸ்டர்ன்களை அழித்துவிடுதல் அல்லது திருத்துதல்.

👉 அழித்தல், ஒழுங்காக அகற்றுதல் அல்லது தேவையற்று அகற்றப்பட்ட எல்லாப் பொருட்களையும் மீள்சுழற்சி செய்தல்.

👉 மூடி, துளைகள், மீள்பயன்படுத்த முடியாத அல்லது அகற்றப்பட்ட டயர்களில் மண்போட்டு அல்லது சீமெந்திட்டு மூடுதல்.

👉 தொடர்ந்து சுத்தம் செய்யாத அல்லது பேணப்படாத அடைபட்ட கூரைப்பீலிகளை அகற்றிவிடுதல் அல்லது கிரமமாக சுத்தம் செய்தல்.

👉 மூடுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் (பொலித்தீன் மற்றும் செயற்கை இறப்பர் தோல்), கொங்கிறீட் தளங்களில் நீர் தேங்கி நிற்காமல் பராமரித்தல்.

👉 மரப்பொந்து மற்றும் மூங்கில் துளைகளில் மண், சீமெந்திட்டு நிரப்புதல்.

👉 நீர் தங்கக்கூடிய அலங்கார தாவரங்களை நடுவதைத் தவிர்த்தல்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரிய பொறுப்புள்ளது. தான் வாழும் இடத்தையும், சூழலையும் நீர் தேங்காதவாறு பராமரிப்பதுடன், நுளம்புகள் அற்றதாகவும் உறுதிப்படுத்த வேண்டும்.

தினமும் ஒரு ஐந்து நிமிடம் அல்லது வாரத்துக்கு ஒரு முப்பது நிமிடம் இதற்காக ஒதுக்க முடியாமல் போனால், பெறுமதியான உயிரை அல்லது உறவுகளைக் கூட இழக்கும் நிலை ஏற்படலாம்.

Dr. N. Ariff,
Regional Epidemiologist,
Kalmunai.

இந்த கால கட்டத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சலை டெங்கு நோயாக கருத்தில்கொண்டு தம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் ஒவ்வொரு தனி நபருக்...
11/12/2019

இந்த கால கட்டத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சலை டெங்கு நோயாக கருத்தில்கொண்டு தம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் ஒவ்வொரு தனி நபருக்கும் கடப்பாடு உள்ளது.

இந்த கால கட்டத்தில் உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1) கட்டாய ஓய்வு அவசியம்:
சிறியவர்களாயினும், பெரியவர்களாயினும் கடின வேலைகளைத் தவிர்த்து ஓய்வு எடுக்கவேண்டியது அவசியமாகும். மாணவர்களை பாடசாலைகளுக்கோ மேலதிக வகுப்புகளுக்கோ அனுப்புவதைத் தவிர்க்கவும்.

2) நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்கவும்:
காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் முக்கியமாக நுளம்புக்கடியிலிருந்து தம்மைப் பாதுகாப்பதன் மூலமாக, தமக்கு ஏற்பட்டிருப்பது டெங்கு நோயாயின், அது பிறருக்கும் பரவுவதைத் தடுக்க முடியும். நோயாளியின் இரத்தக் குழாய்களில் உள்ள டெங்கு வைரஸ் கிருமிகளை நுளம்புகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எடுத்துச் செல்கிறது.

3) காய்ச்சல் நிவாரணி:
காய்ச்சலைக் குறைப்பதற்கு பரசிட்டமோல் தவிர்ந்த வேறு மருந்துகளை ( Mefenamic acid, Diclofenac sodium, Aspirin, Ibuprofen ) உட்கொள்ளக்கூடாது. அதனையும், உரிய நேரத்திற்கு உரிய அளவிலேயே எடுக்கவேண்டும். இல்லையேல் அதுவே எமனாகிவிடலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு ஒரு தடவையில் ஒரு கிலோகிராம் உடல் நிறைக்கு 15மில்லிகிராம் என்ற அளவில் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் 4-6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை கொடுக்கலாம். பொதுவாக, திரவ பரசிட்டமோல் மருந்துகள் 5 மில்லிலிட்டரில் 120 மில்லிகிராம் என்றவாறு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

4) போதியளவு திரவ ஆகாரம்:
காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் காலப்பகுதியிலும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தாலும் உடலின் நீர்த்தன்மை குறைவடையும். அத்துடன் பசியின்மையும், நீரருந்த விருப்பமின்மையும் இதனை மோசமாக்கும். எனவே, ஒரு நாளைக்கு எடுக்கவேண்டிய நீராகாரத்தின் பிரகாரம் அருந்த வேண்டும்.
வெறுமனே நீரை மாத்திரம் அருந்தாமல், இளநீர், பால், ஜீவனி, பழங்கள் மற்றும் காய்கறிச்சாறு, அரிசிக் கஞ்சி, சூப் போன்றவை சிறந்தது. சிறு குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் போது அடிக்கடி சிறிதளவு குளுக்கோஸ்/சீனி கொடுப்பது நல்லது.

5) தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்:
பழுப்பு, கபில அல்லது சிவப்பு நிறத்திலான உணவு மற்றும் திரவ ஆகாரங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பீட்ரூட், நெக்ட்டோ போன்றன. இரத்தக்கசிவு ஏற்படுமாயின் அதனை தவறாக கருத இது இடமளிக்கும்.

6) சிறுநீரின் அளவு:
வழமையாக கழிக்கின்ற சிறுநீரின் அளவை விடவும், அதாவது போதிய நீராகாரம் எடுத்தும் சிறுநீரின் அளவு குறைவாக இருக்குமாயின், உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும். எனினும், வைத்தியசாலைக்குச் செல்வதே பொருத்தமாகும். குறிப்பாக, குழந்தைகளின் மீது அதிக கவனம் எடுக்கவேண்டும்.

7) ஏனைய சில அறிகுறிகள்:
காய்ச்சல் குறைந்திருந்தாலும், குறிப்பாக குழந்தைகள் விடயத்தில் அதாவது, சாப்பிடாமை, சுறுசுறுப்பின்மை, வயிற்றுவலி, தொடர்ச்சியான வாந்தி, உடலில் சிவப்பு நிறப்புள்ளிகள், 6 மணித்தியாலங்களுக்கு மேல் சிறுநீர் கழிக்காமை, பல்முரசு மற்றும் மல சலத்தினூடாக இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும்.

8) இரத்தப் பரிசோதனை:
காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், வைத்திய ஆலோசனையின்படி இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன்படி, செங்குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130000/ml யை விட குறைவாக இருந்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், வீடுகளில் அவசர நேரத்தில் ஆதரவில்லாதவர்கள், போக்குவரத்து வசதி குறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், முன்னரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர் போன்றோர் காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

9) பப்பாசி இலைச்சாறு:
காய்ச்சல் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்குள் பப்பாசி இலைச்சாற்றை எந்தக் காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது. அதுவே எமனாகிவிடக்கூடிய ஆபத்துண்டு. நோயின் உண்மையான நிலவரத்தை அது போலியாக மறைத்து, இரத்தப் பரிசோதனையில் செங்குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் தொடர்பான பிழையான முடிவை எடுப்பதற்கு வழிவகுக்கலாம்.

10) நுளம்பு பெருகாமல் தடுத்தல்:
எது எவ்வாறாயினும், இந்தக் காலப்பகுதியில் மாத்திரமல்லாது எந்தக் காலப்பகுதியிலும் தாம் சார்ந்த பகுதிகளில் நுளம்புகள் பெருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடப்பாடாகும்.
நுளம்புகள் முட்டையிட்டு தம்மைப் பெருக்கிக்கொள்ள ஒரு துளி நீர் போதுமானதாகும்.

"டெங்கு நோய் ஆபத்தானது. வருமுன் காப்போம்"

Dr. N. Ariff
Regional Epidemiologist
Office of RDHS
Kalmunai

01/12/2019
டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம்!⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️அண்மையில் விட்டு விட்டுப் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, அக்கரைப...
17/11/2019

டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம்!
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

அண்மையில் விட்டு விட்டுப் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய அபாயகரமான நிலமை காணப்படுகிறது.

மழை நீர் தேங்கி நின்று நுளம்புகள் அதிகமாகி டெங்கு நோயைப் பரப்பி வருகிறது.

தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை சகலரும் அறிவீர்.

👉பொதுமக்கள் தமது வீடு வளவுகளில் தினமும் ஒரு 5 நிமிடங்களை நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றுங்கள் அல்லது நீர் தேங்கி நிற்காதவாறு கவனியுங்கள்.

👉பயன்படுத்தப்படாத வீடுகள், வெற்று வளவுகள் மற்றும் கட்டட நிர்மானம் நடைபெறும் இடங்களிலும் அவதானம் செலுத்துங்கள்.

👉கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகளை நுளம்புகள் நுழையாத வண்ணம் நுளம்பு வலைகளினால் மூடுங்கள்.

👉வீட்டு மொட்டைமாடிகள் மற்றும் கூரைப் பீலிகளில் கரிசனை எடுங்கள்.

👉பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்கள் மற்றும் மத ஸ்தலங்களின் பொறுப்புதாரிகள் இவ்விடயத்தில் அதிகம் சிரத்தை எடுங்கள்.

👉நுளம்புக் கடியிலிருந்து உங்களையும் பிள்ளைகளையும் பாதுகாருங்கள்.

👉இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அல்லது காய்ச்சல் குறைந்தும் உடலில் ஏதும் மாற்றங்கள் இருந்தாலும் இரத்தப் பரிசோதனைக்காக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.

👉போதிய நீராகாரம் மற்றும் ஓய்வை உறுதி செய்யுங்கள்.

👉டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகருக்கு சுயமாகவே முன்சென்று ஒத்துழைப்பு வழங்குங்கள்.

#டெங்கு_நோய்_மிகவும்_ஆபத்தானது

#உங்களின்_பாதுகாப்பு_உங்களின்_கரங்களில்

@ D N A

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bright Future Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram